இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க கோரி ஆர்ப்பாட்டம்!!
ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடந்த 21ஆம் தேதி மீன் பிடிப்பதற்கான அனுமதி சீட்டு பெற்று 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். இந்த நிலையில் தனுஷ்கோடி - தலைமன்னார் இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அப்பகுதிக்கு ரோந்து வந்த இலங்கை கடற்படை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி ஒரு விசைப்படகையும் அதில் இருந்த ஆறு மீனவர்களையும் கைது செய்து சிறையில் அடைத்தது.
இதையடுத்து ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருவதோடு இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட ஆறு மீனவர்களையும் விசைப்படகுகளையும் மீட்டு தர வேண்டும், கடந்த 2018 ஆண்டிலிருந்து தற்போது வரை இலங்கை கடற்படை வசமுள்ள அனைத்து விசைப்படகு, நாட்டுப்படகையும் மீட்டு தரக்கோரியும், ராமேஸ்வரம் பேருந்து நிலையம் முன்பாக மீனவர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் ஏராளமானோர் கலந்துகொண்டு மத்திய மாநில அரசுகளை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். மீனவர்களின் போராட்டத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.