நடிகர் போண்டா மணியின் மருத்துவச் செலவு முழுவதையும் ஏற்ற அரசு..!!
தமிழ் திரையுலகின் பிரபல நகைச்சுவை நடிகர் போண்டா மணி. இவர் பல திரை படங்களில் வைகை புயல் வடிவேலுவுடன் இணைந்து நகைச்சுவையில் அசத்தி இருப்பார். இந்நிலையில் படப்பிடிப்பு ஒன்றின் போது சாக்கடை நீரில் தவறி விழுந்துள்ளார். அந்த நீர் நுரையீரலில் தங்கியதால் சுவாசப் பிரச்சனை ஏற்பட்டு சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவரை மருத்துவர்கள் பரிசோதித்த பின் இரண்டு சிறுநீரகமும் செயல் இழந்துள்ளது எனத் தெரிவித்துள்ளனர். மேலும் போண்டா மணிக்கு டயாலிசிஸ் அல்லது சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் பெரிதும் பயந்துபோன போண்டா மணி தனக்கு தான் சார்ந்த நடிகர் சங்கமும், அரசும் உதவ வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையில் போண்டா மணியின் உடல்நிலை குறித்து அவருடன் நடித்த நடிகரும், நண்பருமான பெஞ்சமின் வெளியிட்ட உருக்கமான வீடியோவும் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டது. இதனை பார்த பலரும் தற்போது நடிகர் போண்டாமணியை நேரில் சென்று சந்தித்து பல்வேறு உதவிகளை செய்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் போண்டா மணிக்கு நடிகர் சங்கம் உதவிக்கரம் நீட்டியுள்ளது. தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் நடிகர் மனோபாலா ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் போண்டா மணியை இன்று சந்தித்து நலம் விசாரித்தார். மேலும் அவருக்கு நிதியுதவியையும் வழங்கினார்.
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் அறிவுறுத்தலின்படி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நடிகர் போண்டாமணி அவர்களை சந்தித்து அளிக்கப்படும் சிகிச்சை குறித்து கேட்டறிந்து அதற்கானமுழு செலவையும்முதலமைச்சர் மருத்துவ காப்பீட்டுதிட்டத்தின் மூலம் ஏற்க்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது pic.twitter.com/O6M8IPkvQD
— Subramanian.Ma (@Subramanian_ma) September 22, 2022
இதையடுத்து ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் நடிகர் போண்டாமணியை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். அப்போது, மருத்துவர்களிடம் சிகிச்சைக் குறித்துக் கேட்டறிந்தார். இதையடுத்து "சிகிச்சைக்கான செலவு முழுவதையும் முதலமைச்சர் மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அரசு ஏற்கும்" என நடிகர் போண்டா மணியிடம் அமைச்சர் மா. சுப்பிரமணியன் உறுதியளித்தார்.