வாடகை வீட்டில் நாட்டு வெடிகுண்டு தயாரிப்பு... சிக்கிய இளம் கூலிப்படை.. மக்கள் பதற்றம் !!

 
rowdy

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கஞ்சா விற்பனை ஒடுக்க காவல் கண்காணிப்பாளர் சுதாகர் தனிப்படை அமைத்து கடும் நடவடிக்கை எடுத்து வருகிறார். இந்த நிலையில், காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட‌ மாண்டூகணீஸ்வரர் கோவில் தெரு பகுதியில் ஒரு வீட்டில் சிலர் வாடகை எடுத்து தங்கியிருந்து கஞ்சா விற்பனை செய்வதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. ‘

இதனையடுத்து அவ்வப்போது அவ்வீட்டிற்கு சென்று வந்த காஞ்சிபுரம் மாநகராட்சியில் பணிபுரியும் சிவசங்கரன்‌ என்பவரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அந்த வீட்டில் சிலர் தங்கியிருப்பது தெரியவந்தது. பின்னர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட போலீசார், திடீரென வீட்டில் புகுந்து சோதனை நடத்திய போது அங்கு நாட்டு வெடிகுண்டுகள் தயாரிக்கப்பட்டு வைத்திருந்ததும், தயாரிக்க பயன்படுத்தி ஆணி, பால்ரோஸ் போன்ற மூலப்பொருட்கள் இருந்தது தெரியவந்தது.மேலும் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களும் இருப்பது தெரியவந்தது.

`rowdy

பின்னர் இதில் தொடர்புடைய சென்னை வியாசர்பாடியை சேர்ந்த புகழேந்தி (21), அவரது நண்பர்களான திருத்தணியை சேர்ந்த ஜெயகுமார் (23),சோமேஸ் (21),லோகேஸ் ( 22) ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதற்கு மூளையாக செய்யப்பட்ட முக்கிய குற்றவாளியான விக்கி (எ) பரிவட்டம் விக்கி தலைமறைவாக இருந்து வந்த நிலையில் போலீசார் தொடர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில் தாயார்குளம் அருகே பதுங்கியிருந்த கஞ்சா விற்பனையாளர்கள் மணிகண்டன், வசந்த்குமார் ஆகியோர் போலீசாரின் சிக்கினர். அதனை தொடர்ந்து பரிவட்டம் விக்கி தப்பியோடிய போது கால் தடுக்கி கீழே விழுந்து நிலையில் போலீசாரிடம் பிடிபட்டார். இதனையெடுத்து அவருக்கு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளித்து மாவு கட்டு போட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

From around the web