மிரட்டும் மாண்டஸ்.!! பொதுமக்கள் செய்ய வேண்டியவை என்னென்ன.?
சென்னைக்கு 270 கி.மீ. தொலைவில் நிலைகொண்டுள்ள மாண்டஸ் புயல் இன்று நள்ளிரவு முதல் நாளை அதிகாலைக்குள் கரையை கடக்க உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. மாண்டஸ் புயலில் இருந்து பாதுகாத்துக் கொள்ள மக்கள் என்னென்ன வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி புயல் நேரத்தில் பொதுமக்கள் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் என்னென்ன என்பதைக் காணலாம்.

குடிசை வீடுகளில் வசிப்பவர்கள், கடற்கரை ஓரத்தில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும். அப்படி செல்ல இயலாதவர்கள் அருகில் உள்ள அரசுப் பள்ளிகள் மற்றும் சமுதாயக் கூடங்களுக்கு செல்லலாம். முக்கியமான பத்திரங்கள், சான்றிதழ்கள் மற்றும் உடமைகளை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். அவசர தேவைக்கு டார்ச்லைட், மெழுகுவர்த்தி, தீப்பெட்டி போன்றவற்றை தயாராக வைத்திருக்க வேண்டும். வானிலை பற்றிய தகவல்களை வானொலி மற்றும் தொலைக்காட்சி மூலம் கேட்டறிந்து கொள்ள வேண்டும். வதந்திகளை நம்பக் கூடாது. பாதுகாப்பற்ற நிலையிலும் இடியும் நிலையிலும் உள்ள கட்டிடங்களில் தஞ்சம் புகக் கூடாது. ஆபத்தான நிலையில் உள்ள கட்டிடங்களில் வசிப்பவர்கள் அங்கிருந்து வேறு பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும். இடிந்து விழும் நிலையில் உள்ள கட்டிடங்களின் அருகில் பொதுமக்கள் செல்ல வேண்டாம். பொதுமக்கள் தேவையின்றி வெளியே செல்லக் கூடாது.

மீனவர்கள் படகுகளை பாதுகாப்பான முறையில் கட்டி வைக்க வேண்டும். படகு இயந்திரங்களையும் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். புயல் ஓய்ந்து விட்டது என கருதி வெளியே வரக் கூடாது. எதிர் திசை காற்று அடித்து ஓய்ந்த பிறகே வெளியே வர வேண்டும். வயதானவர்கள், குழந்தைகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளை பத்திரமாக கவனித்துக் கொள்ள வேண்டும். பால், ரொட்டி மற்றும் உணவுப் பொருட்களை போதுமான அளவில் வீட்டில் வைத்திருக்க வேண்டும். அறுந்து விழுந்த நிலையில் மற்றும் தொங்கும் நிலையில் உள்ள மின் கம்பிகளை பொதுமக்கள் தொடக்கூடாது. கால்நடைகளை மேடான பகுதிகளில் கட்டி வைக்க வேண்டும் போன்ற அறிவுறுத்தல்களை தமிழக அரசு வழங்கியுள்ளது.
