மெட்டா நிறுவனம் அதிரடி… இந்திய பிரிவு தலைவராக சந்தியா நியமனம்…

 
சந்தியா

வாட்ஸ் அப்பின் இந்தியத் தலைவர் அபிஜித் போஸ் மற்றும் இந்தியாவில் உள்ள மெட்டா பிளாட்ஃபார்ம்ஸின் பொதுக் கொள்கை இயக்குநர் ராஜீவ் அகர்வால் ஆகியோர் 2 நாட்களுக்கு முன் ராஜினாமா செய்தனர். முன்னதாக மெட்டாவின் தலைவராக இருந்த அஜித் மோகன், கடந்த சில நாட்களுக்கு முன்பு மெட்டாவின் போட்டி  நிறுவனமான ஸ்னாப் இன்க் நிறுவனத்தில் சேருவதற்காக இங்கிருந்து விலகினார். இந்நிலையில் பேஸ்புக், வாட்ஸ் அப் ஆகியவற்றின் தாய் நிறுவனமான மெட்டா, இந்திய பிரிவு தலைவராக சந்தியா தேவநாதனை நியமித்துள்ளது.

சந்தியா

மெட்டாவின் நீண்டகால வளர்ச்சிக்கும் இந்தியாவிற்கான அர்ப்பணிப்புக்கும் தொடர்ந்து ஆதரவளித்து வரும் சந்தியா தேவநாதன், நிறுவனத்தின் வணிகம் மற்றும் வருவாய் வளர்ச்சிக்கு கவனம் செலுத்துவார் என்றும் இந்தியாவுக்கான புதிய தலைவராக சந்தியாவை வரவேற்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன் எனவும் மெட்டாவின் தலைமை வணிக அதிகாரி மார்னே லெவின் தெரிவித்துள்ளார். மேலும் வாட்ஸ்அப்பின் இந்திய பிரிவு 'பொது கொள்கை இயக்குனராக' தற்போது பணியாற்றி வரும் சிவநாத் துக்ரா,   மெட்டா நிறுவனத்தின் கீழ் இயங்கும் வாட்ஸ்அப், பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலைதளங்களின் 'பொது கொள்கை இயக்குனர்' ஆக செயல்படுவார் என மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது.

சந்தியா

சந்தியா 2023ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதி அன்று புதிய பதவிக்கு மாறுவார் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த 2016-ம் ஆண்டு மெட்டாவில் இணைந்த சந்தியா, சிங்கப்பூர் மற்றும் வியட்நாம் நாடுகளின் மெட்டா நிறுவனத்தின் வணிக பிரிவுகளை கவனித்து கொண்டார். தென்கிழக்கு ஆசியாவில் மெட்டாவின் இ-காமர்ஸ் முயற்சிகளையும் உருவாக்க சந்தியா உதவினார்.

From around the web