அதிர்ச்சி!! என்.எல்.சி. தொழிற்சங்க நிர்வாகி மர்ம மரணம்..!
என்.எல்.சி.யில் ஒப்பந்த தொழிலாளி சண்முகம் இன்று தனது வீட்டில் கழுத்தறுபட்டு மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் நெய்வேலி டவுன்ஷிப் வட்டம்- 4-ல் உள்ள புண்ணாக்கு தெருவில் வசித்து வந்தவர் சண்முகம். இவர் என்.எல்.சி சுரங்கப் பகுதியில் ஒப்பந்த தொழிலாளியாக பணியாற்றி வந்தார். மேலும் சி.ஐ.டி.யு ஒப்பந்த தொழிலாளர் சங்கத்தின் பொருளாளராகவும் பதவி வகித்து வந்தார். இந்நிலையில் இன்று காலை சண்முகம் வீட்டின் கதவை நீண்ட நேரம் திறக்காததாலும், அவரது அலைபேசியை அவர் எடுக்காததாலும் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் சந்தேகமடைந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சண்முகத்தின் வீடு உள்பக்கமாக தாழ்ப்பாள் போடப்பட்டிருந்ததால் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது சண்முகம் வீட்டில் கழுத்தறுபட்ட நிலையில் சடலமாக கிடந்துள்ளார். அவரது சடலத்தின் அருகே கத்தி ஒன்றையும் போலீசார் கண்டெடுத்தனர். இருப்பினும் அந்த கத்தியில் எந்த ரத்த கறையும் தென்படவில்லை. எனவே இது கொலையாக இருக்கும் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். இதனையடுத்து சண்முகத்தின் வீட்டிற்கு மோப்பநாய்கள் வரவழைக்கப்பட்டு தடையங்களை சேகரித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மர்மமான முறையில் பூட்டிய வீட்டிற்குள் சி.ஐ.டி.யு சங்கத்தின் பொருளாளர் கழுத்தறுக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் நெய்வேலியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.