துணிவு பார்க்க அழைத்து செல்லாத பெற்றோர்... +2 மாணவி விபரீத முடிவு !!

துணிவு படத்திற்கு அழைத்து செல்லாததால் 12 ஆம் வகுப்பு பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் முத்தய்யபிள்ளை பகுதியில் சுரேஷ் - சித்ரா தம்பதி வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 2 மகள்களும் உள்ளனர். சுரேஷ் திருப்பனந்தாள் பேரூராட்சி உறுப்பினராக உள்ளார்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் அஜித் நடிப்பில் வெளியாகியுள்ள துணிவு திரைப்படத்திற்கு குடும்பத்துடன் செல்ல முடிவு எடுத்திருந்தனர்.
ஆனால், 2ஆவது மகள் சிவமகா 12ஆம் வகுப்பு படித்து வருகிறார். அவருக்கு தேர்வு என்பதால், வீட்டில் படிக்குமாறு கூறிவிட்டுவிட்டு சுரேஷ், விஜயசித்ரா மற்றும் மூத்த மகளான அருள் பரணிக்கா ஆகிய மூன்று பேரும் துணிவு திரைப்படத்திற்கு சென்றுள்ளனர். நான் வருவேன் என்று சிவமகா கூறியபோதும் பெற்றோர் விட்டுவிட்டு சென்றனர்.
படம் முடிந்து வீட்டுக்கு வந்து வீட்டின் கதவை வெகு நேரமாகி தட்டியபோதும் சிவமகா கதவை திறக்கவில்லை. இந்நிலையில் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் உள்ள அறையில் சிவமகா தூக்கில் தொங்கியவாறு இருந்ததை பார்த்து பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக சிவமகாவை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், சிவமகா ஏற்கனவே இறந்து விட்டார் என்று தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நாச்சியார்கோவில் போலீசார், சிறுமியின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில், அஜித் படத்திற்கு சிறுமியை விட்டுச் சென்றதால் அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.