பட்டப்பகலில் வங்கியில் ரூ20கோடி தங்க நகைகள் கொள்ளை!! சென்னையில் பரபரப்பு!!

 
வங்கி கொள்ளை

சென்னை அரும்பாக்கத்தில் அமைந்துள்ளது  பெடரல் வங்கி. இந்த வங்கியில் ஃபெட்பேங்க் ஃபாஸ்ட் கோல்டு லோன் என்ற கிளை செயல்பட்டு வருகிறது. இந்த வங்கிக்குள் திடீரென  புகுந்த கொள்ளையர்கள் கத்தியை காட்டி மிரட்டி ஊழியர்களை கட்டிப்போட்டு  சென்றனர். இந்த கொள்ளையில்  ரூ 20 கோடி மதிப்பிலான தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றனர். இந்த பெடரல் வங்கியில் சென்னையில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த வாடிக்கையாளர்கள் தங்க நகைகளை அடகு வைத்து கடன் பெற்றுள்ளனர்.
இந்நிலையில் சனிக்கிழமை பிற்பகல் 4 மணிக்கு  வங்கியின் வாடிக்கையாளரான ராணி, அண்ணா நகரைச் சேர்ந்த டேவிட் ஆகியோர் வங்கிக்கு வந்திருந்தனர். அந்த நேரத்தில்  பாதி ஷட்டர் மூடப்பட்ட நிலையில் இருந்ததால்  வங்கியின் உள்ளே டேவிட் சென்றது யாருக்கும் தெரியவில்லை. 


அவர் உள்ளே சென்று பார்த்தபோது ஒரு பெண் ஊழியர் உட்பட 3 பேர் கட்டிப் போடப்பட்டு இருந்தனர். உடனே டேவிட் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். 
வங்கியின் காவலாளி சரவணன், வங்கி பெண் ஊழியர் ராஜலட்சுமி உட்பட 3 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட  முதற்கட்ட விசாரணையில் வங்கியில் வாடிக்கையாளர் சேவை மைய மேலாளராக பணிபுரிந்து வந்த முருகன் என்பவர் கூட்டாளிகளுடன் வந்து இந்த கொள்ளையில் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டுள்ளது. 
வாடிக்கையாளர் சேவை மைய மேலாளரான முருகன், மதிய உணவிற்கு பிறகு காவலாளி சரவணன், பெண் ஊழியர் ராஜலட்சுமி மேலும் ஒரு ஊழியர் என 3 பேருக்கும் மாஸா குளிர்பானம் கொடுத்தார். குளிர்பானம் கசப்பாக இருந்ததாக ஊழியர்கள் குறிப்பிட்டுள்ளனர். 

வங்கி கொள்ளை
அதற்குள் வெளியில் காத்திருந்த கூட்டாளிகள் வங்கிக்குள் நுழைந்து ஊழியர்களின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி அவர்களை கட்டிப்போட்டு நகை பெட்டகத்தின் லாக்கர் சாவிகளை கைப்பற்றினர். அடுத்த சில நிமிடங்களில் ஒட்டுமொத்த நகைகளையும் அள்ளிக் கொண்டு மூன்று பேரும் இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றனர்.இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவ் செய்யப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த போலீஸ் விசாரணையில் சுமார் 20 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகளை கொள்ளையடித்திருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கி கொள்ளை
இதே நேரத்தில் தப்பிச் சென்ற இருசக்கர வாகனத்தின் விவரங்களை கொண்டு சென்னை முழுவதும் பல்வேறு இடங்களில் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். கொள்ளையர்கள் மூவரும் சென்னையில் இருந்து வெளி மாநிலங்களுக்கு தப்பிச் செல்லாமல் தீவிர கண்காணிப்பு போடப்பட்டுள்ளது. 4 தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. வங்கி லாக்கரில் இருந்த பொதுமக்களின் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதாக தகவல் வெளியானதையடுத்து இந்த வங்கியில் அடகு வைத்திருந்த வாடிக்கையாளர்கள் சம்பவ இடத்திற்கு வந்து சேர்ந்தனர்.  2011க்கு பிறகு  மீண்டும் சென்னையில் வங்கிகொள்ளை அரங்கேறி இருப்பது பொதுமக்களிடையே பெரும் அச்சத்தையும், பீதியையும் ஏற்படுத்தியுள்ளது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

From around the web