தொண்டரின் உயிரை பறித்த அதிமுக கொடி கம்பம்!! அதிர்ச்சி சம்பவம்!!
தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் ஆங்காங்கே கட்சிக் கொடிகளை நிறுவியுள்ளனர். இப்படி நிறுவப்பட்ட அதிமுக 100 அடிக் கட்சிக் கொடி தொண்டரின் உயிரையே பலி வாங்கிய அதிர்ச்சி சம்பவம் செங்கல்பட்டில் நிகழ்ந்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், 100 அடி உயரமுள்ள அதிமுக கொடிக்கம்பம் உள்ளது.
அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் ஆக உள்ள எடப்பாடி பழனிசாமி கையால் திறந்து வைக்கப்பட்ட கொடி கம்பம் என்பதால், அந்தப் பகுதியை சேர்ந்த அதிமுகவினர் இந்த கொடிக்கம்பத்தை தொடர்ந்து பராமரித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த வாரம் மாண்டஸ் புயல் காரணமாக அதிமுக கொடி கிழிந்து, சேதம் அடைந்தது. இந்த கொடியை மாற்றுவதற்காக கொடி கம்பத்தை, இறக்கி புதிய ரோப் மற்றும் கொடியை மாற்றி ஏற்றுவதற்காக , அதிமுகவை சேர்ந்தவர்கள் கிரேன் மூலம் கொடி கம்பத்தை இறக்கினர். அப்போது கொடி கம்பத்தின் ரோப்பை சரி செய்து, மீண்டும் கொடிக்கம்பத்தை தூக்கி நிறுத்தும் பொழுது கம்பம் தவறி விழுந்து, இதில் கீழே நின்று கொண்டிருந்த அதிமுக தொண்டர் செல்லப்பன் மீது கம்பம் விழுந்துள்ளது.
இதில் பலத்த காயம் அடைந்த செல்லப்பன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதனையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் இந்த சம்பவம் குறித்து மதுராந்தகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இது தொடர்பாக அந்த பகுதியை சேர்ந்த அதிமுக பிரமுகர் சரவணன், கிரெய்ன் ஓட்டுநர் கோபிநாத்தை என்ற இருவரை போலிசார் கைது செய்துள்ளனர்