கும்மிடிப்பூண்டி அருகே10-ம் வகுப்பு மாணவியை கொன்ற காதலன்.. வெளியான அதிர்ச்சி தகவல்

 
Pathirivedu

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த நெல்வாய் கிராமத்தில் வசித்து வருபவர் திலகா. இவரது மகள் உஷா (16). இவர், பெரியபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த சில மாதங்களாக உஷா பள்ளிக்கு செல்லவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த 12-ம் தேதி வீட்டில் இருந்து உஷா மாயமானார். அவரது தாய் திலகா, பல இடங்களில் தேடி வந்தார். இதுகுறித்து ஊத்துக்கோட்டை காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் புகார் எதுவும் பதிவு செய்யப்படவில்லை.

dead body

இந்நிலையில் நேற்று முன்தினம் பாதிரிவேடு காவல் எல்லைக்கு உட்பட்ட கொள்ளானூர் அருகே உள்ள ஆராமணி ஏரியில், உஷாவின் உடல் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பாதிரிவேடு போலீசார் ஏரியில் பிணமாக மிதந்தது காணாமல் போன பள்ளி மாணவி உஷா என்பதனை உறுதி செய்தனர்.

இதையடுத்து உஷாவின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக இன்ஸ்பெக்டர் அய்யனாரப்பன் தலைமையில் பாதிரிவேடு போலீசார் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில், முக்கரம்பாக்கத்தை சேர்ந்த19 வயது பிரவீன், 17 வயது சிறுவனையும் பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

arrest

விசாரணையில் பிரவீனுக்கும் மாணவிக்கும் இடையே பழக்கம் இருந்து வந்ததாகவும், திருமணம் செய்யச் சொல்லி கட்டாயப்படுத்தியதால், சிறுவனுடன் சேர்ந்து மாணவியின் தலையில் கட்டையால் அடித்தும், கழுத்தை நெறித்தும் பிரவீன் கொலை செய்து, மாணவியை ஏரியில் வீசிச் சென்றது தெரியவந்துள்ளது. இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 15 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

From around the web