மாணவர்களை மழையில் நிற்க வைத்த பள்ளி நிர்வாகம்.? அராஜகத்தை கண்டித்து பெற்றோர்கள் ஆர்ப்பாட்டம்!!
பள்ளிக்கு தாமதமாக வந்ததால் 2 மணி நேரத்திற்கும் மேலாக மாணவர்களை மழையில் நிற்க வைத்த சம்பவம் சென்னையில் அரங்கேறியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் சிட்லபாக்கத்தில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் பயின்று வரும் மாணவர்களை பள்ளிக்கு கால தாமதமாக வந்ததாக கூறி, குறிப்பிட்ட மாணவர்களை மட்டும் பள்ளி நிர்வாகம் மழையில் நிற்க வைத்ததாக கூறப்படுகிறது. சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக மாணவர்கள் மழையில் நனைந்தபடி வெளியில் நின்றுள்ளனர். பின்னர் இதுகுறித்து, மாணவர்கள் தங்களது பெற்றோர்களுக்கு தகவல் அளித்தனர்.
அதன்பேரில் பள்ளிக்கு வந்த பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை மழையில் நிற்க வைத்த தனியார் பள்ளி நிர்வாகத்தை கண்டித்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து பள்ளி நிர்வாகம் சார்பில் போலிசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அதன்பேரில் விரைந்து வந்த போலிசார் பெற்றோர்களுடன் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டனர். இதனால் பள்ளி வளாகத்தில் பரபரப்பு நிலவியது.