ஊர் கூடி, கோலாகலமாக நடைபெற்ற மீன்பிடித் திருவிழா!!
திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த கள்ளிப்பட்டியில் சுமார் 30 ஏக்கர் பரப்பளவில் கள்ளிகுளம் உள்ளது. அப்பகுதி மக்களின் பிரதான நீர் ஆதாரமாக இக்குளம் விளங்குகிண்ரது. இக்குளத்தில் கடந்த ஆண்டு பெய்த மழையின் காரணமாக நீர் முழுவதுமாக நிறைந்திருந்தது. தற்போது குளத்தில் நீரின் அளவு குறைந்துள்ள நிலையில் சுமார் 15 ஆண்டுகளுக்கு பின் இன்று குளத்தில் மீன்பிடித் திருவிழா நடைபெற்றது.
இதனைத்தொடர்ந்து அதிகாலை ஊர் முக்கியஸ்தர்கள் விழாவை தொடங்கி வைத்தனர். பின்னர் ஊர் மக்கள் போட்டி போட்டுக் கொண்டு மீன்பிடி வலைகளுடன் குளத்தில் இறங்கி ஆர்வத்துடன் மீன் பிடித்தனர். இந்த மீன்பிடி திருவிழாவில் சுற்றுப்புற பகுதியைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்லாது கரூர், புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.
இதில் மருத்துவ குணம் நிறைந்த கெண்டை, கெளுத்தி, கட்லா, ஜிலேபி என நாட்டுவகை மீன்கள் அனைவருக்கும் சிக்கியது. இதில் சிலருக்கு சுமார் 2 கிலோவில் இருந்து 5 கிலோ எடையுள்ள பெரிய மீன்கள் அதிகளவில் சிக்கியது. அனைவருக்கும் மீன்கள் சிக்கியதால் பொதுமக்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர். 15 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த மீன்பிடித் திருவிழாவில் பொதுமக்கள் போட்டி போட்டு கொண்டு பிடித்தது ஊர் மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.