சோகம்!! பூந்தமல்லி அருகே குடும்பத்தகராறில் மனைவி தூக்கிட்டு தற்கொலை..!!

 
பெண் பலி

பூந்தமல்லி அடுத்த அகரமேல், எம்.ஜி.எம் நகரை சேர்ந்தவர் கருணாகரன்(33), இவரது மனைவி சத்யா(28), இருவரும் பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்சாக பணிபுரிந்து கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு வயதில் கிஷாந்த் என்ற ஆண் குழந்தை உள்ள நிலையில் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் இன்று ஏற்பட்ட தகராறில் கருணாகரன் தனது மனைவி சத்யாவை அடித்ததாக கூறப்படுகிறது.

இதனால் கோபித்து கொண்டு வீட்டின் படுக்கை அறைக்கு உள்ளே சென்றவர் நீண்ட நேரம் ஆகியும் வெளியே வராததால் ஜன்னல் வழியாக பார்த்தபோது சத்யா தூக்கு போட்டு தொங்கிய நிலையில் இருந்துள்ளார். இதனை  கண்டு அதிர்ச்சி அடைந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது சத்யா இறந்து கிடந்தது தெரியவந்தது. இது குறித்து நசரத்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

 தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் இறந்து போன சத்யா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து கருணாகரனிடம் விசாரித்து வருகின்றனர். மேலும் திருமணமாகி 2 ஆண்டுகள் ஆவதால் ஆர்டிஓ விசாரணைக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

From around the web