ஜன்னலோரம் அமர்ந்த ரெயில் பயணிக்கு நேர்ந்த சோகம்!! எதிர்பாராத துயரம்!
பொதுவாக இந்தியாவில் மக்கள் பேருந்தை விட ரெயில் பயணத்தையே அதிகம் விரும்புகின்றனர். ஏனெனில் ரெயிலில் குறைந்த கட்டணத்தில் படுக்கை, இருக்கை, கழிவறை, உள்ளிட்ட பல வசதிகள் இருக்கும். இதனால் நாட்டில் பலர் ரெயில் பயணத்துக்கே முக்கியத்துவம் அளிக்கின்றனர். அதிவும் இரயிலில் பயணிக்கும் பயணிகள் பலர் காற்று வாங்குவதற்காக தங்களுக்கு ஜன்னலோர சீட் தான் வேண்டும் என்று அடம் பிடிப்பர். ஆனால் இங்கு ஜன்னலோரம் அமர்ந்த ஒருவருக்கு துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
டெல்லியில் இருந்து கான்பூருக்கு நிலஞ்சல் எக்ஸ்பிரஸ் ரெயில் சென்று கொண்டிருந்தது. இதில் ஹரிகேஷ் குமார் என்ற பயணி ஒருவர் பயணம் செய்துள்ளார். அந்த ரெயில் பிரக்யாராஜ் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென்று கம்பி ஒன்று ஜன்னலின் கண்ணாடியை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைந்தது. பாய்ந்த கம்பி ஜன்னலோரம் அமர்ந்திருந்த பயணி ஹரிகேஷ் குமார் கழுத்தில் சட்டென்று பாய்ந்தது. இந்த கோர சம்பவத்தில் ஹரிகேஷ் குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கழுத்தில் கம்பி பாய்ந்த நிலையில் ஹரிகேஷ் குமாரை கண்ட சக பயணிகள் அலறியடித்து ரெயிலை நிறுத்தினர்.
மேலும் ரெயில்வே அதிகாரிகளுக்கும் தகவல் கொடுத்தனர். பின்னர் விரைந்து வந்த அதிகாரிகள் மற்றும் ரயில்வே போலிசார் ஹரிகேஷ் குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து ரெயில்வே அதிகாரிகள் கூறுகையில், "ஹரிகேஷ் குமார் கழுத்தில் பாய்ந்த இரும்பு கம்பியானது தண்டவாளத்தில் கிடந்திருக்கலாம். அப்போது அந்த கம்பியின் மீது வேகமாக வந்த ரெயிலின் சக்கரம் ஏறியபோது, கம்பி உள்ளே பாய்ந்திருக்க வாய்ப்புள்ளது" என்றனர். இருப்பினும் அந்த கம்பி எப்படி பாய்ந்து உள்ளே சென்றது என்பது குறித்து போலிசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காற்று வாங்குவதற்காக ஜன்னலோரம் அமர்ந்த பயணியின் கழுத்தில் கம்பி குத்தி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.