அடிதூள்!! 25 பைசாவுக்கு சிக்கன் பிரியாணி!!

 
ஸ்நேக் பாபு பிரியாணி கடை

வைகை புயல் வடிவேலுவின் 'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான நிலையில், அவரது ரசிகர்கள் 'ஸ்நேக் பாபு’ என்னும் பெயரில் ஹோட்டலை ஆரம்பித்து, 25 பைசாவுக்கு பிரியாணியை விற்பனை செய்துள்ளனர். பல ஆண்டுகள் இடைவெளிக்கு பின்பு வடிவேலுவின் ’நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ திரைப்படம் சமீபத்தில் திரையரங்கில் வெளியானது. இதனால் அவரது ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பிரியாணி

இதனைக்கொண்டாடும் விதமாக திருவண்ணாமலை அடுத்த ஆலத்தூர் கிராமத்தை சேர்ந்த வடிவேலு ரசிகர்களான ராம், தசரதன் மற்றும் ஆதித்யன் எனும் இளைஞர்கள் மூவர் சேர்ந்து ’ஸ்நேக் பாபு’ என்ற உணவகத்தினை திறந்து உள்ளனர். திறப்பு விழா சலுகையாக பழைய 25 பைசாவுக்கு சிக்கன் பிரியாணி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. 25 பைசாவுக்கு சிக்கன் பிரியாணி வாங்க, கிராம மக்கள் மற்றும் இளைஞர்கள் முண்டியடித்து ஹோட்டலில் குவிந்தனர். வடிவேலு கூறிய ”யாருக்காகவும், எதற்காகவும், எப்போதும் காலையில் சாப்பாடு, மதியம் சாப்பாடு, ராத்திரி சாப்பாடு இந்த மூன்று விஷயத்தையும் விட்டுக் கொடுக்காதீங்க” என்பதை தான் தங்கள் தாரக மந்திரமாக வைத்து செயல்படுவதாக கடையின் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

 பிரியாணி இலவசம்...

மேலும் பொதுமக்களையும் இளைஞர்களையும் கவரும் வகையில், “கையில பணம் ரொம்ப கம்மியா இருக்கு பரவாயில்ல...ஸ்நேக் பாபு’ ஹோட்டல்ல 25 பைசாவுக்கு சிக்கன் பிரியாணி கொடுக்குறாங்க, அதை வாங்கி சாப்பிடுவோம்” என்று நூதன முறையில் பேனர் வைத்து மக்களின் கவனத்தை தங்கள் பக்கம் திருப்பி அசத்தியுள்ளனர். இவர்களின் இந்த வித்தியாசமான முயற்சி அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

From around the web