“வாங்கிய கடனுக்காக 2 மகள்களை விற்க முயன்ற தந்தை; திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் மகள்கள் கண்ணீர் புகார்!
ராஜஸ்தான் மாநிலத்தைப் பூர்வீகமாகக் கொண்டு, தற்போது திண்டுக்கல்லில் வசித்து வரும் பத்மா (25) மற்றும் சப்னா (23) ஆகிய இரு இளம் பெண்கள், தங்களது சொந்தத் தந்தைக்கு எதிராகத் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கண்ணீருடன் புகார் மனு ஒன்றை அளித்துள்ளனர்.
திண்டுக்கல் கச்சேரி தெருவில் வசித்து வரும் இந்த வடமாநிலக் குடும்பத்தின் பின்னணியில் கடந்த சில ஆண்டுகளாகவே கடுமையான குடும்ப வன்முறைகளும், அத்துமீறல்களும் அரங்கேறி வந்துள்ளன. இவர்களது தந்தை தனராம், திண்டுக்கல் மேற்கு ரதவீதி பகுதியில் பேன்சி ஸ்டோர் கடை நடத்தி வந்துள்ளார். இதில் ஏற்பட்ட கடுமையான தொழிலில் நஷ்டம் காரணமாக அவருக்குப் பலத்த கடன் சுமை ஏற்பட்டுள்ளது.
இந்தத் தொகையை அடைக்க முடியாத விரக்தியில், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு தனராம் தனது மனைவி சாந்தி தேவியை ஏமாற்றி ராஜஸ்தான் மாநிலத்திற்கு அழைத்துச் சென்று, அங்குள்ள ஒரு கோவிலில் தனியாகக் கைவிட்டுவிட்டுத் திண்டுக்கல் திரும்பியுள்ளார்.
தாயைப் பிரிந்த நிலையிலும், தங்களது தந்தைக்குத் தெரியாமல் பத்மாவும் சப்னாவும் பிற வீடுகளில் வீட்டு வேலை செய்து கொண்டே, அஞ்சல் வழிக் கல்வி மூலமாகத் தங்களது 12-ம் வகுப்புப் படிப்பை வெற்றிகரமாக முடித்துள்ளனர்.
வறுமையின் காரணமாக இவர்களால் தங்களது வீட்டு வாடகையைச் சரியாகக் கொடுக்க முடியவில்லை. இதைப் பயன்படுத்திக் கொண்ட வீட்டு உரிமையாளர், அந்தப் பெண்களைத் தங்களது கடைக்கே வேலைக்கு வரும்படி கட்டாயப்படுத்தி, அடித்து உதைத்துக் கடுமையான சித்திரவதைகளுக்கு உள்ளாக்கியுள்ளார். இதனால் வேறு வழியின்றி இருவரும் கடைகளுக்கு வேலைக்குச் செல்லத் தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில், தந்தை தனராம் தான் வாங்கிய கடன்களை அடைப்பதற்காகத் தனது சொந்த மகள்கள் என்றும் பாராமல், பத்மா மற்றும் சப்னா ஆகிய இருவரையும் கொத்தடிமையாக விலை பேசி விற்கத் தீவிர முயற்சி எடுத்து வந்துள்ளார்.
உயிருக்கு ஆபத்து: இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளிக்க வந்த அந்தப் பெண்கள், "எங்களது தந்தைக்கு எதிராகப் புகார் அளிக்க வந்துள்ள விபரம் தெரிந்தால், எங்களது வடமாநில உறவினர்கள் எங்களை அடித்து உதைத்து, ஊனமாக்கி வலுக்கட்டாயமாக எங்களை எங்களது சொந்த ஊருக்கே கடத்திச் சென்று விடுவார்கள்" என்று மாவட்ட அதிகாரிகளிடம் கண்ணீர் மல்கத் தங்களது உயிருக்கு இருக்கும் ஆபத்து குறித்துப் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
இந்த விவகாரத்தில் திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறை உடனடியாகத் தலையிட்டு, பாதிக்கப்பட்ட இரு இளம் பெண்களுக்கும் தகுந்த போலீஸ் பாதுகாப்பு வழங்குவதுடன், மகள்களை விற்க முயன்ற கொடூர தந்தை மற்றும் கொடுமைப்படுத்திய வீட்டு உரிமையாளர் மீது சட்டப்படியான கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தற்போது கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
