ஓடும் ஆம்னி பேருந்தில் தீ விபத்து.. பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது எப்படி?
ஓடும் பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்ததால் 3 பெண்கள் உள்பட 11 பேர் காயமடைந்துள்ளனர்.
கோவையில் இருந்து பெங்களூருக்கு தினசரி அரசு பேருந்துகள் மற்றும் தனியார் ஆம்னி பேருந்துகள் அதிகளவில் இயக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், கோவையில் இருந்து பெங்களூரு நோக்கி ஆம்னி பேருந்து ஒன்று சென்றது. சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த புதுச்சாம்பள்ளி என்ற இடத்தில் சென்றுகொண்டிருந்தபோது, பயணிகள் அலறினர்.
அதாவது, நள்ளிரவு ஒன்றரை மணியளவில் பேருந்தின் பின்புறத்தில் திடீரென புகை கிளம்பியுள்ளது. பயணிகள் கூறியதையடுத்து ஓட்டுநர் உடனடியாக பேருந்தை சாலையோரமாக நிறுத்தினார். தீ விபத்தால் அச்சமடைந்த பயணிகள் முண்டியடித்து கொண்டு கீழே இறங்கினார்கள். சிலர் அலறி கொண்டு ஜன்னல் வழியாகவும் குதித்தனர். பின்னர் சில நிமிடங்களில் தீ பிடித்து எரிந்து பரவியது. தீ பேருந்து முழுவதும் கொழுந்து விட்டு ஏறிய தொடங்கியது.
இது குறித்து தகவலறிந்து சென்ற தீயணைப்பு படையினர் சுமார் அரைமணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். எனினும் இந்த விபத்தில் 3 பெண்கள் உட்பட 11 பயணிகளுக்கு லேசான தீ காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் மேட்டூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தீ விபத்தில் பயணிகள் சிலரது லேப்டாப் உள்ளிட்ட உடைமைகள் எரிந்து சேதமடைந்தன.
பயணிகள் உரிய நேரத்தில் பார்த்து ஓட்டுநரிடம் கூறியதால் தீவிபத்தில் பெரியளவில் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.