அரசு பேருந்து ஆட்டோ மீது மோதி உடல் நசுங்கி ஒருவர் பலி!
தமிழகத்தில் திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தில் இருந்து தாம்பரத்திற்கு அரசு பேருந்து பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து வானகரம், ஓடமா நகர் அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த இரும்பு தடுப்புகளை உடைத்துக் கொண்டு வேகமாக பாலத்தின் மேல் இருந்து பள்ளத்தில் இறங்கியது.

சர்வீஸ் சாலையில் தறிகெட்டு ஓடிய பேருந்து, எதிர் திசையில் வந்த ஆட்டோ மீது மோதி சிறிது தூரம் இழுத்துச் சென்றுவிட்டது. இதில், ஆட்டோ அப்பளம் போல் நொறுங்கியது. இந்த விபத்தில் ஆட்டோ ஓட்டுனர் மாதவரம் தினேஷ், உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அத்துடன் பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்த சுமார் 30 க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்தால் தாம்பரம் - மதுரவாயல் புறவழிச்சாலை மற்றும் சர்வீஸ் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
