ஓயாத நீட் தற்கொலை அவலம்.. தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்த மாணவி தற்கொலை..!!
நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்த மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நீட் தேர்வால் பாதிக்கப்பட்டு முதன் முதலில் தமிழகத்தைச் சேர்ந்த மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டார். அதன் பிறகு எண்ணிலடங்கா மாணவர்கள் தொடர்ந்து தற்கொலையில் ஈடுப்பட்டு வருகின்றனர். அதைப் போல் ராஜஸ்தான் மாநிலம் கோட்டா மாவட்டத்தில் நீட் மற்றும் ஜேஇஇ நுழைவுத் தேர்வுகளுக்கான பயிற்சி மையங்கள் அதிகளவில் செயல்பட்டு வருகிறது. இங்கு இருக்கும் பயிற்சி மையத்தில் ஏராளமான வெளி மாநில மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர். இங்கு மட்டுமே இதுவரை 27 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர். இந்த நிலையில், மேற்கு வங்க மாணவி தற்கொலையை அடுத்து, கோட்டா மாணவ - மாணவியர் தற்கொலை இந்த ஓராண்டில் மட்டும் இதுவரை 28-க்கு உயர்ந்துள்ளது.
கோட்டாவில் நேற்று நள்ளிரவில் மின்விசிறியில் தூக்கிட்டு இறந்த நிலையில் மேற்கு வங்க மாணவியின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. மதியம் தனது அறைக்குள் சென்ற மாணவி இரவு உணவுக்கும் வெளியே வராததில், விடுதியின் உரிமையாளர் காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளார். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் கதவை உடைத்து, மாணவியின் சடலத்தை கைப்பற்றினர்.
கோட்டாவில் நீட் உள்ளிட்ட நுழைவுத் தேர்வு தயாரிப்புகளுக்கான பயிற்சி மையங்களின் வருடாந்திர வணிகம் ரூ10,000 கோடியாக மதிப்பிடப்படுகிறது. நாடு நெடுகிலும் இருந்து, இங்கு தங்கிப் படிக்கும் மாணவர்கள் மத்தியில் பாடச்சுமை மற்றும் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்துகொள்வதும் அதிகரித்து வருகிறது