'செண்டை மேளம்' இசைத்து கேரளாவை அதிர வைத்த பிரதமர் மோடி- வைரலாகும் வீடியோ!
கேரள சட்டமன்றத் தேர்தலையொட்டி, தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்துப் பிரசாரம் செய்யப் பிரதமர் நரேந்திர மோடி நேற்று கேரளா வருகை தந்தார். அப்போது பாலக்காடு கோட்டை மைதானத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டார்.
கேரள கலாசாரத்திற்கு மதிப்பளிக்கும் வகையில், பிரதமர் மோடி பாரம்பரிய வெள்ளை நிற முண்டு (வேட்டி), குர்தா மற்றும் தங்க பார்டர் கொண்ட 'கசவு' துண்டு அணிந்து மேடைக்கு வந்தார். அவரது இந்தத் தோற்றம் அங்கிருந்த தொண்டர்களைப் பெரிதும் கவர்ந்தது. மேடையில் அவருக்கு அளிக்கப்பட்ட உற்சாக வரவேற்பின் போது, அங்கிருந்த கலைஞர்கள் செண்டை மேளம் இசைத்தனர். அப்போது அங்கிருந்த ஒரு செண்டை மேளத்தை வாங்கிய பிரதமர் மோடி, மிகுந்த உற்சாகத்துடன் அதன் தாளத்திற்கு ஏற்பச் சிறிது நேரம் இசைத்தார்.

ஒரு நாட்டின் பிரதமர் தங்களது மண்ணின் பாரம்பரிய இசையை ரசித்து இசைத்ததைக் கண்ட பாலக்காடு மக்கள், உற்சாக மிகுதியில் 'மோடி.. மோடி..' என முழக்கமிட்டனர். இந்நிகழ்வு குறித்துப் பதிவிட்டுள்ள பலரும், பிரதமர் மோடி செல்லும் இடமெல்லாம் அந்தந்த மாநிலத்தின் கலாசாரத்தோடு தன்னை இணைத்துக் கொள்வதை ஒரு சிறந்த ராஜதந்திரமாகவும், மக்கள் மீதான அன்பாகவும் பார்க்கின்றனர். பாலக்காடு கூட்டத்தை முடித்துவிட்டு, அவர் திருச்சூரில் பிரம்மாண்ட ரோடு ஷோ நடத்தினார். கேரளாவில் வரும் ஏப்ரல் 9ம் தேதி ஒரே கட்டமாகச் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது.
