“நடிகர்கள் நினைத்தால் வரலாற்றை மாற்ற முடியும்”.. விஜய்க்கு நடிகர் பாலையா வாழ்த்து!

 
பாலையா பாலையா

தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிகரும், தெலுங்கு தேசம் கட்சியின் சட்டமன்ற உறுப்பினருமான பாலகிருஷ்ணா, தமிழக சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் பெற்றுள்ள அமோக வெற்றிக்குத் தனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். திரையுலகில் இருந்து அரசியலுக்கு வந்து குறுகிய காலத்தில் விஜய் நிகழ்த்தியுள்ள இந்தச் சாதனை, தென்னிந்திய அரசியலில் ஒரு புதிய உத்வேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

விஜய்

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், தமிழகத்தில் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரும், ஆந்திராவில் தனது தந்தையும் தெலுங்கு தேசக் கட்சியின் நிறுவனருமான என்.டி.ஆரும் படைத்த வரலாற்றுச் சாதனைகளை நினைவு கூர்ந்துள்ளார். ஒரு நடிகர் மக்கள் செல்வாக்குடன் களம் இறங்கினால், அரசியலில் எத்தகைய மாற்றத்தையும் ஏற்படுத்த முடியும் என்பதையும், வரலாற்றை மீண்டும் மாற்றி எழுத முடியும் என்பதையும் அவர்கள் ஏற்கனவே நிரூபித்துள்ளதாகப் பாலையா சுட்டிக்காட்டியுள்ளார்.

தவெக விஜய்

தற்போது அந்தப் பிரம்மாண்டமான வெற்றியைத் தனது முதல் முயற்சியிலேயே மீண்டும் ஒருமுறை நினைவுபடுத்தியுள்ள சகோதரர் விஜய்க்குத் தனது பாராட்டுகளைத் தெரிவிப்பதாக அவர் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். திரையுலகப் பின்னணியில் இருந்து வந்து மக்கள் சேவையில் முத்திரை பதிக்கும் விஜய்யின் அரசியல் பயணம் சிறக்க வேண்டும் எனவும் அவர் வாழ்த்தியுள்ளார். பாலையாவின் இந்த வாழ்த்துச் செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவதுடன், தவெக தொண்டர்களிடையே மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.