ரயிலில் நடிகை அந்தரா ரகளை.. RPF வீரர் மீது தாக்குதல் நடத்தி பரபரப்பு!

 
நடிகை அந்தரா பானர்ஜி

மும்பையிலிருந்து சூரத் சென்ற ரயிலில் பயணச் சீட்டு (Ticket) மாறி அமர்ந்தது தொடர்பாக ஏற்பட்ட தகராறில், இந்தி நடிகை அந்தரா பானர்ஜி இரயில்வே பாதுகாப்புப் படை வீரரை பிளேடால் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மும்பையிலிருந்து சூரத் நோக்கிச் சென்ற ரயிலில் பயணித்த நடிகை அந்தரா பானர்ஜி, வேறு நபருக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையில் அமர்ந்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து சக பயணிகள் மற்றும் ரயில்வே வீரர் கேள்வி எழுப்பியதால் வாக்குவாதம் உருவாகியுள்ளது.

வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த நடிகை அந்தரா பானர்ஜி தான் வைத்திருந்த ரேசர் பிளேடால் RPF வீரரைத் தாக்கியுள்ளார். மேலும் தனது ஆடைகளைக் களைந்து, தற்கொலை செய்து கொள்ளப்போவதாக மிரட்டல் விடுத்து ரகளையில் ஈடுபட்டுள்ளார். இந்த ரகளையைத் தொடர்ந்து, தஹானு ரயில் நிலையத்தில் வைத்து காவல்துறையினர் அந்தரா பானர்ஜியைக் கைது செய்தனர்.

பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இச் சம்பவம் ரயில் பயணிகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.