ஆந்திரா கலப்படப் பால் கொடூரம்... பலி எண்ணிக்கை 16-ஆக உயர்வு - முதல்வர் ரூ.10 லட்சம் நிதியுதவி அறிவிப்பு!

 
கலப்பட பால் கலப்பட பால்

ஆந்திரப் பிரதேச மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் நிகழ்ந்துள்ள கலப்படப் பால் விவகாரம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை தற்போது 16 ஆக உயர்ந்துள்ளது. 

ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டம், நரசபுரம் கிராமத்தில் விநியோகிக்கப்பட்ட கலப்படப் பாலை அருந்திய நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கிழக்கு கோதாவரி மாவட்டத்தின் நரசபுரம் கிராமம் மற்றும் ராஜமுந்திரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் அட்டல கணேஸ்வர ராவ் என்பவர் முறையான அங்கீகாரம் இன்றி நடத்தி வந்த 'வரலட்சுமி பால் பண்ணை' மூலம் இந்த நச்சு கலந்த பால் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

பால்

இந்தப் பண்ணையில் இருந்து பால் வாங்கிய சுமார் 106 குடும்பங்கள் வாந்தி, மயக்கம் மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற தீவிர உடல்நலப் பாதிப்புகளுக்கு உள்ளாகினர். இந்நிலையில் இன்று நிலவரப்படி, பலி எண்ணிக்கை 16-ஆக உயர்ந்துள்ளதாக மாவட்ட மருத்துவ மற்றும் சுகாதார அதிகாரி வெங்கடேஸ்வர ராவ் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார்.

ராஜமகேந்திரவரம் அரசு மருத்துவமனையில் இன்னும் 3 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டு, மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் உள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து ஆந்திரச் சட்டசபையில் பேசிய முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்:

பால்

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ₹10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என அறிவித்துள்ளார். பாதிக்கப்பட்டவர்களின் முழு மருத்துவச் செலவையும் அரசே ஏற்கும். இது தற்செயலாக நடந்ததா அல்லது உள்நோக்கத்துடன் செய்யப்பட்ட சதியா என்பது குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.

பால் பண்ணை உரிமையாளர் கணேஸ்வர ராவை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாவட்டம் முழுவதும் உள்ள தனியார் பால் பண்ணைகளில் உணவுப் பாதுகாப்புத் துறையினர் அதிரடி சோதனைகளைத் தொடங்கியுள்ளனர். அங்கீகாரம் இல்லாத பண்ணைகளை உடனடியாக மூடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.