மது விருந்தில் விபரீதம்.. கள்ளக்காதலி மர்மமான முறையில் உயிரிழப்பு!
சென்னை ஆவடி அருகே 37 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில், அவருடன் தங்கியிருந்த 25 வயது இளைஞரை ஆவடி போலீசார் இன்று கைது செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி பகுதியைச் சேர்ந்தவர் ராதிகா (37). இவருக்குத் திருமணம் ஆகி 7 ஆண்டுகளுக்கு முன்பு கணவர் உயிரிழந்துவிட்டார். அதன்பின்னர், அதே பகுதியைச் சேர்ந்த மணி (25) என்ற இளைஞருடன் ராதிகாவிற்குப் பழக்கம் ஏற்பட்டுள்ளது. வயது வித்தியாசம் பாராமல் இருவரும் கடந்த சில ஆண்டுகளாக நெருங்கிப் பழகி வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று ராதிகாவின் வீட்டில் மணியும் ராதிகாவும் ஒன்றாக இருந்துள்ளனர். அப்போது இருவரும் மது அருந்தியதாகத் தெரிகிறது. மது போதையில் இருந்த இருவருக்கும் இடையே ஏதோ ஒரு காரணத்திற்காக வாக்குவாதம் ஏற்பட்டு, அது முற்றியுள்ளது. திடீரென ராதிகா தூக்கிட்டுக் கொண்டதாகக் கூறி, மணி அவரை மீட்டு ஆவடி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளார். ஆனால் அங்கு ராதிகாவைச் சோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர்.
இது குறித்து மருத்துவமனை அளித்த தகவலின் பேரில் ஆவடி போலீசார் விரைந்து வந்து ராதிகாவின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். ராதிகாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாகக் கருதிய போலீசார், மணியைப் பிடித்துத் தனி அறையில் வைத்து விசாரித்தனர். விசாரணையில் மணி முன்னுக்குப் பின் முரணாகப் பேசியதால், சந்தேகத்தின் அடிப்படையில் அவரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.

ராதிகா உண்மையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது மது போதையில் ஏற்பட்ட தகராறில் மணி அவரைத் தாக்கியதில் உயிரிழந்தாரா? என்பது பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே முழுமையாகத் தெரியவரும் எனப் போலீசார் தெரிவித்துள்ளனர்.
