அம்மா உணவகத்தில் சாப்பிட்ட தம்பதிக்கு நேர்ந்த சோகம்.. திடீரென சீலிங் இடிந்து விழுந்ததால் பரபரப்பு..!!

அம்மா உணவகத்தில் ‘பால் சீலிங்’ உடைந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்கள் மீது விழுந்தததால் அவர்கள் படுகாயமடைந்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் நகராட்சி நிர்வாகம் சார்பில் பேருந்து நிலையம் உள்ளே கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் வெளியூர் பயணிகள், ஏழை, எளிய பொதுமக்கள் பயன் பெற்று வருகின்றனர். அந்த வகையில் காமராஜர் சாலையை சேர்ந்தவர் சேவியர் (57), அவரது மனைவி மல்லிகா (52). இவர்கள் இருவரும் பேரூந்து நிலையம் முன்பு உள்ள ஒரு தனியார் மருத்துமனையில் காவலாளியாக வேலை பார்த்து வருகின்றனர்.
இவர்கள் அம்மா உணவகத்தில் சாப்பிடுவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். இந்நிலையில் வழக்கம் போல் இன்று காலை உணவகத்தில் டிபன் சாப்பிட்டு கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக உணவகத்தின் மேற்கூரையின் ‘பால் சீலிங்’ திடீரென உடைந்துது. சீலிங்கிற்கு நேர் எதிர் நின்று சாப்பிட்டு கொண்டிருந்தனர்.
உடைந்த சீலிங் பாகம் அவர்கள் மீது விழுந்தது. இதில் இருவரும் படுகாயமடைந்தனர். இதை பார்த்ததும் அப்பகுதியினர் ஓடி வந்து இருவரையும் மீட்டு குளச்சல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.