"அமெரிக்காவில் மிரட்டிய 8 வயது சிறுவன்!" - 1330 திருக்குறள்களையும் ஒப்புவித்து 'குறள் இளவல்' பட்டம்!

 
டாலஸ் அமெரிக்கா தமிழ்ச்சங்கம் டாலஸ் அமெரிக்கா தமிழ்ச்சங்கம்

கடல் கடந்தும் தமிழ் மணம் வீசும் வகையில், அமெரிக்காவின் டல்லாஸ் நகரில் நடைபெற்ற திருக்குறள் போட்டியில் 8 வயது சிறுவன் ஆதவன் 1330 குறள்களையும் தங்குதடையின்றி ஒப்புவித்து மாபெரும் சாதனை படைத்துள்ளார்.

'ஒரு குறள் - ஒரு டாலர்' : 19 ஆண்டுகாலப் பயணம்:

அமெரிக்காவின் ப்ளேனோ தமிழ்ப் பள்ளி மற்றும் சாஸ்தா தமிழ் அறக்கட்டளை இணைந்து கடந்த 19 ஆண்டுகளாக 'ஒரு குறள் - ஒரு டாலர்' என்ற தனித்துவமான போட்டியை நடத்தி வருகின்றன. அதாவது ஒரு திருக்குறளைச் சரியாக ஒப்புவித்தால் ஒரு டாலர் பரிசுத் தொகை வழங்கப்படும். இந்தப் போட்டியின் மூலம் புலம் பெயர்ந்த தமிழ்ச் சிறுவர்களிடையே திருக்குறள் ஆர்வம் விதைக்கப்பட்டு வருகிறது.

"அமெரிக்காவில் மிரட்டிய 8 வயது சிறுவன்!" - 1330 திருக்குறள்களையும் ஒப்புவித்து 'குறள் இளவல்' பட்டம்: 'ஒரு குறள் - ஒரு டாலர்' போட்டியில் புதிய உலக சாதனை!

'குறள் இளவல்' ஆதவனின் அதிரடி சாதனை:

இந்த ஆண்டின் போட்டியில் 8 வயது சிறுவன் ஆதவன் செந்தில்குமார் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்: 133 அலகுகளையும் (1330 குறள்கள்) முழுமையாக ஒப்புவித்து, அமெரிக்காவில் 1330 குறள்களையும் சொன்ன மிக இளைய சிறுவன் என்ற பெருமையைப் பெற்றார். குறள்களைச் சொல்வதுடன் நில்லாமல், திருக்குறளில் உள்ள மொத்தச் சொற்கள், உயிர், மெய் மற்றும் உயிர்மெய் எழுத்துக்கள் எத்தனை முறை பயன்படுத்தப்பட்டுள்ளன, எந்த எழுத்து பயன்படுத்தப்படவில்லை போன்ற புள்ளிவிவரங்களையும் விரல் நுனியில் சொல்லி நடுவர்களை வியக்க வைத்தார். ஆதவனின் தந்தை ராஜபாளையத்தையும், தாய் புதுச்சேரியையும் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

"அமெரிக்காவில் மிரட்டிய 8 வயது சிறுவன்!" - 1330 திருக்குறள்களையும் ஒப்புவித்து 'குறள் இளவல்' பட்டம்: 'ஒரு குறள் - ஒரு டாலர்' போட்டியில் புதிய உலக சாதனை!

2 வயது மழலையின் அறிமுகம்:

இந்தப் போட்டியில் ஆதவனின் சாதனை ஒருபுறம் இருக்க, வலமுயை பார்த்திபன் என்ற 2 வயது மழலை 10 குறள்களை ஒப்புவித்து அனைவரது பாராட்டுகளையும் பெற்றார். 19-வது ஆண்டாக நடைபெற்ற இந்தப் போட்டியில் மொத்தம் 157 பேர் பங்கேற்று, ஒட்டுமொத்தமாக 8,666 முறை திருக்குறள்கள் ஒப்புவிக்கப்பட்டன.

இதர போட்டிகள்:
திருக்குறள் போட்டியுடன் சேர்த்து ஆத்திச்சூடி (68 பேர்), பேச்சுப் போட்டி (52 பேர்), மற்றும் கட்டுரைப் போட்டிகளும் (16 பேர்) நடத்தப்பட்டன. வேலு ராமன் மற்றும் விசாலாட்சி வேலு தலைமையிலான தன்னார்வலர்கள் இந்த விழாவைச் சிறப்பாக ஒருங்கிணைத்தனர்.