மாணவர்களுக்கு ஓர் செம்ம அறிவிப்பு.. கல்வித்தொகை பெற உடனே விண்ணப்பம் செய்யுங்கள்..!
இதுக்குறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா வெளியிட்டு உள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: நாடு முழுவதும் இதர பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், சீர்மரபினர் ஆகிய பிரிவுகளை சேர்ந்த 9-ம் வகுப்பு மற்றும் 11-ம் வகுப்பு படித்து வரும் 30 ஆயிரம் மாணவ- மாணவிகளுக்கு இளம் சாதனையாளர்களுக்கான பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை (YASASVT) வழங்கும் திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. இதற்காக தேசிய தேர்வு முகமையால் கடந்த செப்டம்பர் மாதம் 29-ந் தேதி தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
ஆனால் அந்த தேர்வு தள்ளிவைக்கப்பட்டது. தற்போது மேற்கண்ட தேர்வு ரத்து செய்யப்பட்டு உள்ளது என்று மத்தியஅரசு பொது அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
அதில், 9 மற்றும் 11-ம் வகுப்பு படிக்கும் மாணவ-மாணவிகள் அவர்கள் 8 மற்றும் 10-ம் வகுப்புகளில் 60 சதவீதத்துக்கு அதிகமாக மதிப்பெண்கள் பெற்று இருந்தால் உதவித்தொகை பெற விண்ணப்பிக்க தகுதியானவர்கள் என்று கூறப்பட்டு உள்ளது.
எனவே தகுதியான மாணவ-மாணவிகள் அனைவரும் ஆன்லைன் மூலம் தேசிய கல்வி உதவித்தொகை தளத்தில் விண்ணப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் விவரங்களுக்கு https://scholarships.gov.in மற்றும் http://socialjustice.gov இந்த ஆகிய இணையதளங்களில் தெரிந்து கொள்ளலாம்.