8 மணி நேர சோதனை முடிவு! அன்பில் மகேஸ் 18-ம் தேதி நேரில் ஆஜராக உத்தரவு

 
அன்பில் மகேஷ்

 

திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியின் திருச்சி இல்லத்தில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் இன்று (செப்.16) நீண்ட நேரம் சோதனை நடத்தினர். தனியார் பள்ளிகளுக்கு அரசு அனுமதிகளை பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.100 கோடிக்கும் மேல் மோசடி செய்ததாக எழுந்த புகார் தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக இந்த சோதனை நடைபெற்றதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சி தென்னூர் அண்ணா நகரில் உள்ள அன்பில் மகேஸ் வீட்டில் காலை தொடங்கிய சோதனை பல மணி நேரம் நீடித்தது. இதனுடன் தொடர்புடைய மேலும் சில இடங்களிலும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், பள்ளித் தரம் உயர்வு உள்ளிட்ட அரசு அனுமதிகளை பெற்றுத் தருவதாகக் கூறி பணம் வசூலித்ததாக கைது செய்யப்பட்டுள்ள பி.டி. அரசகுமார் தொடர்பான வழக்கில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில்தான் அன்பில் மகேஸ் தொடர்புடைய இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டுள்ளது.

 சோதனைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அன்பில் மகேஸ், தன்னை குறிவைத்து அரசியல் காழ்ப்புணர்ச்சியுடனும், மடைமாற்றத்துக்காகவும் இந்த சோதனை நடத்தப்பட்டதாக குற்றம்சாட்டியுள்ளார்.மேலும், சோதனையின்போது தன்னிடம் எந்தவித விசாரணையும் நடத்தப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.அவரது இந்த குற்றச்சாட்டுக்கு ஆளும் தரப்பின் பதில் குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாக வேண்டியுள்ளது. இதே விவகாரத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் சோதனையை அரசியல் காழ்ப்புணர்ச்சி என விமர்சித்துள்ளார்.

மேலும், வரும் செப்.18-ம் தேதி மத்திய குற்றப்பிரிவு போலீசார் முன்பு நேரில் ஆஜராகுமாறு தனக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.இதனிடையே, சோதனையில் ஆவணங்கள், நிதி தொடர்பான பதிவுகள் மற்றும் மின்னணு சாதனங்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டதாக போலீஸ் தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது. விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.