அண்ணாமலை புதிய இயக்கத்தில் 5 லட்சத்தை தாண்டிய எண்ணிக்கை!
பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தலைவர் அண்ணாமலை தனது பதவியை முறைப்படி ராஜினாமா செய்துள்ளார். அவரது விலகல் முடிவை கட்சியின் தேசிய தலைமை ஏற்றுக்கொண்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து சமூக வலைதள நேரலையில் பேசிய அண்ணாமலை, பொதுத்தேர்தலை எதிர்கொள்ளும் நோக்கில் புதிய அரசியல் இயக்கம் தொடங்கப் போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

புதிய இயக்கம் குறித்த அறிவிப்பை வெளியிட்ட அண்ணாமலை, அதில் பொதுமக்கள் தங்களை இணைத்துக் கொள்வதற்கான புதிய இணையதள முகவரியையும் அறிமுகப்படுத்தினார். இந்த அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களிலேயே அவரது ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் அந்த இணையதளத்தில் தங்களை உறுப்பினர்களாகப் பதிவு செய்யத் தொடங்கினர். மதியம் 1 மணி நிலவரப்படி 1 லட்சத்து 50 ஆயிரம் பேர் தங்களை இணைத்துக் கொண்டனர்.

மாலை 4 மணி நிலவரப்படி இந்த புதிய இயக்கத்தில் ஆன்லைன் மூலம் இணைந்தவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்தைக் கடந்து பெரும் சாதனையை படைத்துள்ளது. நிமிடத்திற்கு நூற்றுக்கணக்கானோர் இணைந்து வரும் வேளையில், இதில் இணைந்தவர்களில் பெரும்பாலோர் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அண்ணாமலையின் இந்த புதிய அரசியல் அவதாரம் தமிழக அரசியல் வட்டாரத்தில் தற்பொழுது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
