மாஸ்... 24 மணி நேரத்திற்குள் 15 லட்சம் பேர்... அண்ணாமலை தொடங்கிய புதிய இயக்கத்தில் குவியும் ஆதரவாளர்கள்!

 
15lksh 15lksh

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை ஜூன் 5 அன்று அக்கட்சியில் இருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். கடந்த 18 மாதங்களாக கட்சியின் டெல்லி உயர்மட்டத் தலைவர்களுடன் நடத்திய பல கட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, தமிழக அரசியல் களம் தொடர்பாக இருதரப்பு கருத்துகளும் ஒத்துப்போகாத காரணத்தால் இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் தனது ராஜினாமா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இவரது ராஜினாமாவை கட்சித் தலைவர் நிதின் நபின் ஏற்றுக்கொண்டுள்ளார்.

கடந்த 2020 ஆம் ஆண்டு காவல்துறையின் உயர் பதவியை உதறிவிட்டு பாரதிய ஜனதா கட்சியில் இணைந்த அண்ணாமலை, சேர்ந்த சில வாரங்களிலேயே மாநிலத் துணைத் தலைவராகவும், சரியாக ஓராண்டுக்குப் பிறகு தனது 37 வது வயதில் மாநிலத் தலைவராகவும் நியமிக்கப்பட்டார். தற்போது கட்சியில் இருந்து வெளியேறிய அவர், இளைஞர்களையும் சாமானிய மக்களையும் ஒருங்கிணைத்து 'நாங்கள் தலைவர்கள்' என்ற பெயரில் ஒரு புதிய அரசியல் இயக்கத்தைத் தொடங்கியுள்ளார். இந்த இயக்கம் தொடங்கப்பட்ட 24 மணி நேரத்திற்குள் சுமார் 15 லட்சம் பேர் இதில் தங்களை இணைத்துக் கொண்டுள்ளனர்.

அரசியல் என்பது மேட்டுக்குடியினருக்கும் வம்சாவளி ஆட்சிக்கும் மட்டுமே சொந்தமானது என்ற நிலையை மாற்றி, சாமானிய மக்களுக்கான மக்கள் மைய அரசியலை உருவாக்கப் போவதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். கல்வி, சுகாதாரம், சுற்றுச்சூழல் மற்றும் இளைஞர் மேம்பாடு ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளித்து அடிமட்ட அளவில் மாற்றத்தை ஏற்படுத்தப் போவதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், தமிழ்நாட்டில் வரவிருக்கும் அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் தங்களது புதிய இயக்கம் போட்டியிடும் என்றும் அண்ணாமலை உறுதிபடத் தெரிவித்துள்ளார்.