கள்ளழகர் மண்டூக முனிவருக்குச் சாப விமோசனம்... திரளான பக்தர்கள் பங்கேற்பு !

 
கள்ளழகர் கள்ளழகர்

மதுரை மாநகரில் உலகப் புகழ்பெற்ற சித்திரை மாத்திருவிழா சைவமும் வைணவமும் இணையும் மாபெரும் பெருவிழாவாக மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த மாதம் 19 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய இந்த திருவிழாவில் 28 ஆம் தேதி மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் கோலாகலமாக நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து அழகர்மலையிலிருந்து 29 ஆம் தேதி மாலை பல்லக்கில் புறப்பட்ட கள்ளழகர் 30 ஆம் தேதி காலை 6 மணிக்கு மதுரையை வந்தடைந்தார். அங்குப் பல லட்சம் மக்கள் திரண்டிருக்கத் தங்கக் குதிரை வாகனத்தில் அவர் நேற்றுக் காலை 5.35 மணிக்கு வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இன்று கள்ளழகர் ஆற்றில் இறங்குகிறார்!

வைகை ஆற்றில் இறங்கிய பிறகு பல்வேறு மண்டகப்படிகளில் எழுந்தருளிய கள்ளழகர் இன்று காலை சேஷ வாகனத்தில் தேனூர் மண்டபத்திற்குப் புறப்பட்டுச் சென்றார். அங்கு மதியம் கருட வாகனத்தில் எழுந்தருளிய அவர் நீண்டகாலமாகச் சாபத்தில் தவித்த மண்டூக முனிவருக்குச் சாபவிமோசனம் வழங்கிச் சிறப்பித்தார். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஆன்மிக நிகழ்வை லட்சக்கணக்கான பக்தர்கள் ஒன்றுகூடி மிகுந்த பக்திப் பரவசத்துடன் கண்டுகளித்துத் தரிசனம் செய்தனர். இதனைத் தொடர்ந்து இன்று இரவு 10 மணி முதல் மதுரை ராமராயர் மண்டபத்தில் விடிய விடிய அழகரின் சிறப்பு வாய்ந்த தசாவதார நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

சித்திரைத் திருவிழா கள்ளழகர் வைகை

இதன் தொடர்ச்சியாக நாளைய தினம் காலை 6 மணிக்கு மோகினி அவதாரத்திலும் மதியம் ராஜாங்க அலங்காரத்திலும் கள்ளழகர் பக்தர்களுக்குக் காட்சி தரவுள்ளார். அதைத் தொடர்ந்து நடைபெறும் பல்வேறு சிறப்பு நிகழ்வுகளுக்குப் பிறகு மே 4 ஆம் தேதி அதிகாலை பூப்பல்லக்கில் அவர் மீண்டும் அழகர்கோவில் நோக்கிப் புறப்படுவார். வழியில் உள்ள பல்வேறு மண்டகப்படிகளில் எழுந்தருளிப் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் அவர் இறுதியாக மே 5 ஆம் தேதி காலை 10.40 முதல் 11.10 மணிக்குள் இருப்பிடத்தைச் சென்றடைவார். பல மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து வந்துள்ள பக்தர்களுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் அரசு நிர்வாகம் மிகச் சிறப்பாகச் செய்துள்ளது.