பகீர்... பயிற்சி விமானத்தின் ‘ப்ரொப்பெல்லர்’ இறக்கையில் சிக்கிய பெண் விமானி; பலத்த காயங்களுடன் மீட்பு!

 
பயிற்சி விமான விபத்து

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள பயிற்சி ஓடுதளத்தில், இரவு நேரப் பயிற்சியை முடித்துவிட்டு விமானத்தை நிறுத்திய பெண் பயிற்சி விமானி ஒருவர், எதிர்பாராதவிதமாக அதிவேகமாகச் சுழன்று கொண்டிருந்த விமானத்தின் 'ப்ரொப்பெல்லர்' இறக்கையில் சிக்கிப் பலத்த காயமடைந்த திடுக்கிடும் சம்பவம் வட மாநிலங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உ.பி மாநிலம் கான்பூரில் உள்ள விமான ஓடுதளத்தில், நேற்று இரவு பெண் பயிற்சி விமானி ஒருவர் தனது வழக்கமான இரவு நேர விமானப் பயிற்சியை வெற்றிகரமாக முடித்துள்ளார். பயிற்சியை முடித்துவிட்டு விமானத்தை ஓடுதளத்தில் நிறுத்திய போதிலும், அதன் என்ஜின் இன்னும் முழுமையாக அணைக்கப்படாமல் இயங்கிக் கொண்டிருந்துள்ளது. இதனைச் சரியாகக் கவனிக்காத அந்தப் பெண் பயிற்சி விமானி, அவசரமாக விமானத்தின் கேபினை விட்டு வெளியில் இறங்கியுள்ளார்.


விமானத்தின் என்ஜின் இயங்கிக் கொண்டிருந்ததால், அதன் முன்பகுதியில் உள்ள 'ப்ரொப்பெல்லர்' விசிறி இறக்கைகள் இருட்டிலும் அதீத வேகத்தில் சுழன்று கொண்டிருந்தன. துரதிர்ஷ்டவசமாகப் பெண் விமானி அந்தப் பகுதிக்கு அருகே சென்ற போது, சுழன்றுக் கொண்டிருந்த இறக்கை அவர் மீது பலமாக மோதியது. இதில் அவரது உடலில் பல இடங்களில் பலத்த வெட்டுக் காயங்கள் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் சரிந்தார்.

இதனைப் பார்த்துக் அதிர்ச்சியடைந்த ஓடுதளத்தின் தரைக்கட்டுப்பாட்டு ஊழியர்கள் மற்றும் பாதுகாப்புப் படையினர் உடனடியாக ஓடி சென்று, அவரை மீட்டு கான்பூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்து அவசரச் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

விமானப் பயிற்சி விதிமுறைகளின்படி, என்ஜின் முழுமையாக அணைக்கப்பட்டு ப்ரொப்பெல்லர் சுழற்சி முற்றிலும் நின்ற பிறகே விமானிகள் கீழே இறங்க வேண்டும் என்பது விதியாகும்.

எனவே, இந்த விபத்து பெண் விமானியின் கவனக்குறைவால் நேரிட்டதா அல்லது விமானத்தின் கட்டுப்பாட்டுக் கருவிகளில் ஏதேனும் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதா என்பது குறித்துக் கண்டறிய, இந்தியப் பொது சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. கான்பூர் விமானப் பயிற்சிப் பள்ளி அதிகாரிகளிடமும் இது குறித்துத் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.