இயக்குநர் பாரதிராஜா மறைவு... தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் ஆழ்ந்த இரங்கல்!
தமிழ் திரையுலகின் மூத்த இயக்குநரான பாரதிராஜா வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். அவரது மறைவுச் செய்தி கேட்டு ஒட்டுமொத்த தமிழ் சினிமாவும், ரசிகர்களும் பெரும் அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்ந்துள்ளனர். இந்தத் துயரச் செய்தியை அறிந்ததும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், இயக்குநர் பாரதிராஜாவின் மறைவு தமிழ் நெஞ்சங்களுக்கு ஒரு பேரிழப்பு என்று குறிப்பிட்டுள்ளார்.

திரைப்படங்களைத் தமிழ் மண்ணின் எதார்த்தமான வாழ்வியலோடும் கிராமியக் கலைகளோடும் வழங்கி சாதனை படைத்த பெருமை பாரதிராஜாவையே சேரும் என்று ஜி.கே.வாசன் தனது அறிக்கையில் பாராட்டியுள்ளார். தனது இறுதி மூச்சு வரை தமிழ் திரைப்படத் துறையின் வளர்ச்சிக்காகவும், தமிழ் மொழியின் முன்னேற்றத்திற்காகவும் அவர் தொடர்ந்து உழைத்து வந்தார் என ஜி.கே.வாசன் நெகிழ்ச்சியுடன் நினைவு கூர்ந்துள்ளார். மேலும், தென் தமிழகத்தின் பெருமைகளைத் தனது காவியப் படைப்புகள் மூலம் உலகறியச் செய்த மாபெரும் கலைமகன் அவர் என்றும் புகழ்ந்துள்ளார்.
இயக்குநர் இமயம் பாரதிராஜாவை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தினருக்கும், திரைப்படத் துறையினருக்கும் மற்றும் உலகெங்கும் உள்ள லட்சக்கணக்கான ரசிகர்களுக்கும் ஜி.கே.வாசன் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டுள்ளார். மறைந்த மாபெரும் கலைஞனின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதாகத் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அந்த அறிக்கையில் விரிவாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
