உஷார்... ரேஷன் விநியோகம் முதல்.. இபிஎஃப் வரை.. நாடு முழுவதும் அமலுக்கு வந்த 17 முக்கிய மாற்றங்கள்!
நாடு முழுவதும் ஒவ்வொரு நிதியாண்டின் தொடக்கத்திலும் பல்வேறு புதிய நிதி மற்றும் நிர்வாக விதிமுறைகள் அமலுக்கு வருவது வழக்கம். அந்த வகையில் இன்று அமலுக்கு வந்துள்ள மிக முக்கியமான மாற்றங்கள் என்னென்ன என்று தெரிஞ்சுக்கோங்க.
1. ரேஷன் விநியோகத்தில் அதிரடி மாற்றம்: ஒரே தவணையில் 3 மாதப் பொருட்கள்
கோடைக்காலத்தின் கடும் வெப்பத்தைக் கருத்தில் கொண்டும், பொதுமக்களின் அலைச்சலைக் குறைக்கவும் மத்திய அரசு ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. ஏப்ரல், மே மற்றும் ஜூன் ஆகிய மூன்று மாதங்களுக்கான ரேஷன் பொருட்கள் (அரிசி, கோதுமை போன்றவை) ஏப்ரல் மாதத்திலேயே ஒரே தவணையாக வழங்கப்படவுள்ளன.
கோடை வெயிலில் முதியவர்கள் மற்றும் பெண்கள் நீண்ட வரிசையில் நிற்பதைத் தவிர்க்கவும், இந்திய உணவுக் கழக (FCI) கிடங்குகளில் புதிய அறுவடைப் பொருட்களைச் சேமிக்க இடவசதி ஏற்படுத்தவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உதாரணமாக, ஒரு நபருக்கு மாதம் 6 கிலோ அரிசி வழங்கப்படுகிறது என்றால், ஏப்ரல் மாதத்தில் அவர் மொத்தமாக 18 கிலோ அரிசியைப் பெற்றுக் கொள்ளலாம்.

2. வங்கித் துறையில் புதிய மாற்றங்கள் (HDFC & PNB)
வங்கிகள் தங்கள் டிஜிட்டல் சேவைகளை மேம்படுத்தவும், பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் சில புதிய கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்துள்ளன. HDFC வங்கி வாடிக்கையாளர்கள் இனி ஏடிஎம் கார்டு இல்லாமலேயே, மொபைலில் உள்ள UPI ஆப் மூலம் QR கோடை ஸ்கேன் செய்து பணம் எடுக்கலாம். இதுவரை UPI மூலம் பணம் எடுப்பது தனிப்பட்ட சேவையாகக் கருதப்பட்டது. ஆனால், ஏப்ரல் 1ம் தேதி முதல் இதுவும் உங்களின் மாதப்பரிவர்த்தனை கணக்கிலேயே சேர்க்கப்படும். நிர்ணயிக்கப்பட்ட இலவச பரிவர்த்தனை வரம்பைத் தாண்டினால், ஒவ்வொரு முறை பணம் எடுக்கும்போதும் ₹23 + ஜிஎஸ்டி கட்டணமாக வசூலிக்கப்படும்.
பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB) தனது சில குறிப்பிட்ட டெபிட் கார்டுகளுக்கான தினசரி பணம் எடுக்கும் வரம்பைக் குறைத்துள்ளது. மோசடிகளைக் குறைக்கும் நோக்கில், சில கார்டுகளுக்கு ஒரு லட்சமாக இருந்த வரம்பு ₹50,000 ஆகவும், சில பிரீமியம் கார்டுகளுக்கு ₹1.5 லட்சமாக இருந்த வரம்பு ₹75,000 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது.
3. இபிஎஃப் (EPFO) திட்டத்தில் UPI புரட்சி
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனமான (EPFO) தனது 'EPFO 3.0' திட்டத்தின் கீழ் ஒரு முக்கிய வசதியை அறிமுகப்படுத்துகிறது. இனி பிஎஃப் (PF) சந்தாதாரர்கள் தங்களின் பணத்தை (முன்பணம் அல்லது இறுதி செட்டில்மென்ட்) நேரடியாக UPI மூலம் பெற்றுக்கொள்ளலாம்.
இதற்கு முன்னால் பிஎஃப் பணம் வங்கிக் கணக்கிற்கு வர சில நாட்கள் ஆகும். ஆனால், UPI முறை அமலுக்கு வரும்போது, கோரிக்கைகள் சரிபார்க்கப்பட்ட சில மணிநேரங்களிலேயே பணம் உங்கள் கணக்கில் வரவு வைக்கப்படும். ஓய்வூதிய பாதுகாப்பிற்காக பிஎஃப் தொகையின் ஒரு பகுதி 'Frozen' (எடுக்க முடியாத நிலை) செய்யப்படும், மீதமுள்ள தொகையை மட்டுமே UPI மூலம் எடுக்க முடியும்.
4. பான் (PAN) கார்டு மற்றும் சொத்து பரிவர்த்தனை விதிகள்
2026-ம் ஆண்டுக்கான புதிய வருமான வரிச் சட்டங்களின்படி (New Income Tax Act 2025/26), பான் கார்டு தொடர்பான சில தளர்வுகள் மற்றும் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
சொத்து வாங்குதல் (நிலம்/வீடு):
இதுவரை ₹10 லட்சத்திற்கு மேல் சொத்து வாங்கினால் பான் கார்டு கட்டாயமாக இருந்தது. ஏப்ரல் 1 முதல் இந்த வரம்பு ₹20 லட்சமாக உயர்த்தப்படுகிறது. அதாவது ₹20 லட்சம் வரையிலான சொத்துப் பரிவர்த்தனைகளுக்கு பான் கார்டு சமர்ப்பிப்பது கட்டாயமில்லை. இது நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் கிராமப்புற மக்களுக்குப் பெரிய நிம்மதியைத் தரும்.
சொத்துக்களைப் போலவே, குறிப்பிட்ட விலைக்கு அதிகமான வாகனங்களை வாங்கும்போதும் பான் கார்டு விவரங்களைக் குறிப்பிடுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ₹5 லட்சத்திற்கு மேலான உயர் ரக பைக்குகள் அல்லது கார்கள் வாங்கும் போது நிதி வெளிப்படைத்தன்மைக்காக பான் கார்டு அவசியமாகிறது.

5. டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை
ஏப்ரல் 1 முதல் அனைத்து டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளுக்கும் 'Two-Factor Authentication' கட்டாயமாக்கப்படுகிறது. இது ஆன்லைன் மோசடிகளிலிருந்து உங்களைப் பாதுகாக்கும். சிடிஎஸ் (CTS) முறையில் மாற்றம் கொண்டு வரப்பட்டு, காசோலைகள் ஒரே நாளில் பணம் மாற்றப்படும் வசதி மேம்படுத்தப்படவுள்ளது. எனவே இன்று முதல் ஆன்லைன் மற்றும் யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு இரண்டு அடுக்கு பாதுகாப்பு கட்டாயமாக்கப்படுகிறது. இனி ஓடிபி உடன் கைரேகை அல்லது பின் (PIN) போன்ற கூடுதல் சரிபார்ப்பு முறை அவசியமாகும்.
6.டோல் கட்டணங்கள்:
தமிழகத்தில் 60 சுங்கச்சாவடிகளில் இன்று முதல் டோல் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது. வாகனங்களுக்கு ஏற்ப 5 முதல் 7 சதவீதம் வரையில் டோல் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அதே போன்று இன்று முதல் வருடாந்திர ஃபாஸ்ட் டேக் கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது நடைமுறைக்கு வந்துள்ளது.
7.சிலிண்டர் கட்டணம்:
ஒவ்வொரு மாதமும் சிலிண்டர் விலை 1 மற்றும் 15ம் தேதிகளில் நிர்ணயிக்கப்படுகின்ற நிலையில், இன்று வணிக சிலிண்டருக்கான விலை உயர்த்தப்பட்டுள்ளது வியாபாரிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மார்ச் மாதமே சென்னையில் வணிக சிலிண்டர் உயர்த்தப்பட்ட நிலையில், அதன் விலை ₹2,043.50 ஆக இருந்தது. தற்போது இன்று ஒரே நாளில் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ₹218 உயர்த்தப்பட்டுள்ளது
8. புதிய வருமான வரிச் சட்டம் (Income Tax Act, 2025):
சுமார் 60 ஆண்டுகாலப் பழைய 1961-ஆம் ஆண்டு வருமான வரிச் சட்டத்திற்குப் பதிலாக, எளிமையாக்கப்பட்ட புதிய வருமான வரிச் சட்டம் 2025 அமலுக்கு வருகிறது. இது வரி அடுக்குகளை மாற்றவில்லை என்றாலும், வரி தாக்கல் செய்யும் முறையை முற்றிலும் எளிமையாக்குகிறது.
9. 'வரி ஆண்டு' அறிமுகம்:
இதுவரை இருந்த 'நிதியாண்டு' மற்றும் 'மதிப்பீட்டு ஆண்டு' என்ற குழப்பமான நடைமுறை நீக்கப்பட்டு, இனி 'வரி ஆண்டு' என்ற ஒற்றை முறை மட்டுமே நடைமுறையில் இருக்கும்.

10. ஃபார்ம் 16 இடத்தைப் பிடிக்கும் 'ஃபார்ம் 130':
சம்பளம் பெறுபவர்களுக்கு வழங்கப்படும் மிக முக்கியமான ஆவணமான ஃபார்ம் 16, இனி ஃபார்ம் 130 என மாற்றப்படும். இது டிஜிட்டல் முறையில் தானாகவே உருவாக்கப்படும்.
11. மெட்ரோ நகரங்களின் பட்டியலில் சென்னை உள்ளிட்ட 4 புதிய நகரங்கள்:
வீட்டு வாடகை வரி விலக்கு கணக்கீட்டில், இதுவரை டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை ஆகிய 4 நகரங்களுக்கு மட்டுமே 50% சலுகை இருந்தது. இனி இந்த பட்டியலில் பெங்களூரு, புனே, ஹைதராபாத் மற்றும் அகமதாபாத் ஆகிய நகரங்களும் சேர்க்கப்படுவதால் அங்குள்ள ஊழியர்கள் அதிக வரிச் சலுகை பெறலாம்.
12. வங்கி ஏடிஎம் கட்டண உயர்வு:
இலவச ஏடிஎம் பரிவர்த்தனை வரம்பிற்குப் பிறகு வசூலிக்கப்படும் கட்டணம் ரூ.21-லிருந்து ரூ.23 ஆக உயர்த்தப்படுகிறது.
ஏடிஎம்-ல் யுபிஐ மூலம் பணம் எடுப்பதும் இனி வழக்கமான ஏடிஎம் பரிவர்த்தனைக் கணக்கிலேயே சேர்க்கப்படும் (எச்.டி.எப்.சி போன்ற வங்கிகள் இதனை அறிவித்துள்ளன).

13. பான் கார்டு விண்ணப்பத்தில் மாற்றம்:
இன்று முதல் புதிய பான் கார்டு விண்ணப்பிக்க ஆதார் மட்டும் போதாது; பிறப்புச் சான்றிதழ், வாக்காளர் அடையாள அட்டை போன்ற கூடுதல் ஆவணங்கள் தேவைப்படும். மேலும், பான் கார்டில் உள்ள பெயர் கண்டிப்பாக ஆதாரில் உள்ளது போலவே இருக்க வேண்டும்.
14. பங்குச் சந்தை வரி உயர்வு:
பங்குச் சந்தையில் ஃபியூச்சர்ஸ் மற்றும் ஆப்ஷன்ஸ் வர்த்தகம் செய்பவர்களுக்கான பரிவர்த்தனை வரி உயர்த்தப்படுகிறது. இது வர்த்தகர்களுக்கான செலவை அதிகரிக்கும்.
15. கல்வி மற்றும் விடுதி உதவித்தொகை உயர்வு:
பழைய வரி முறையைப் பின்பற்றுபவர்களுக்கு, குழந்தைகளின் கல்விக்கான வரி விலக்கு வரம்பு மாதம் ரூ.100-லிருந்து ரூ.3,000 ஆகவும், விடுதிச் செலவு வரம்பு மாதம் ரூ.300-லிருந்து ரூ.9,000 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

16. ஜிஎஸ்டி 2.0:
ஜிஎஸ்டி வரி அடுக்குகளில் மாற்றங்கள் செய்யப்பட்டு, 12% வரி அடுக்கு நீக்கப்படலாம். பெரும்பாலான பொருட்கள் 5%, 18% அல்லது 40% (ஆடம்பரப் பொருட்கள்) ஆகிய அடுக்குகளுக்குள் கொண்டு வரப்படும்.
17, லாக்கர் கட்டணம் உயர்வு:
பிரபல தனியார் வங்கியான ஹெச்.டி.எஃப்.சி. வங்கி இன்று முதல் லாக்கர் கட்டணத்தை உயர்த்தி அறிவித்துள்ளது. இந்த கட்டண உயர்வு இன்று, இந்த நிதியாண்டு முதல் அமலுக்கு வருகிறது.
இந்த மாற்றங்கள் அனைத்தும் டிஜிட்டல் இந்தியாவை நோக்கிய அடுத்த கட்ட நகர்வாகவும், அதே சமயம் சாதாரண மக்களின் சுமையைக் குறைக்கும் முயற்சியாகவும் பார்க்கப்படுகிறது. குறிப்பாக வங்கி வாடிக்கையாளர்கள் தங்களின் இலவச ஏடிஎம் வரம்புகளைக் கண்காணிப்பதும், பிஎஃப் சந்தாதாரர்கள் தங்களின் KYC விவரங்களைச் சரியாக வைத்திருப்பதும் வரும் நாட்களில் மிகவும் அவசியமாகும்.
