பீகார் அமைச்சரவை விரிவாக்கம்... நிதிஷ்குமார் மகனுக்கு அமைச்சர் பதவி - துணை முதல்வர் பதவியை மறுத்த நிஷாந்த்!

 
பீகார் நிதிஷ்குமார் பீகார் நிதிஷ்குமார்

பீகார் மாநிலத்தில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம் (JDU) தலைமையிலான அமைச்சரவை இன்று அதிகாரப்பூர்வமாக விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. இதில் முன்னாள் முதலமைச்சர் நிதிஷ்குமாரின் மகன் நிஷாந்த் குமார் அமைச்சராகப் பொறுப்பேற்க வாய்ப்புள்ளதாகப் பாட்னா அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த மாதம் நிதிஷ்குமார் தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதனைத் தொடர்ந்து, அவரது வாரிசாக நிஷாந்த் குமார் அரசியலில் முக்கியப் பொறுப்பிற்கு வருவார் என எதிர்பார்க்கப்பட்டது.

பீகார் நிதிஷ்குமார்

முன்னதாக நிஷாந்த் குமாருக்குத் துணை முதல்வர் பதவி வழங்கப்படலாம் எனத் தகவல்கள் வெளியாகின. ஆனால், "நேரடியாகப் பெரிய பதவிகளை ஏற்பதை விட, ஒரு தொண்டராகக் களத்தில் பணியாற்றி எனது திறமையை நிரூபித்த பின்பே அங்கீகாரத்தைப் பெற விரும்புகிறேன்" எனக் கூறி அந்த வாய்ப்பை அவர் கண்ணியமாக மறுத்துவிட்டார்.

நிஷாந்த் குமாரின் இந்த அணுகுமுறை ஜேடியு தொண்டர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், இன்று நடைபெறும் அமைச்சரவை விரிவாக்கத்தில் அவருக்கு ஒரு முக்கியத் துறை ஒதுக்கப்பட உள்ளது. இதன் மூலம் பீகார் அரசியலில் நிதிஷ்குமாருக்கு அடுத்தபடியாக ஒரு இளம் தலைமை உருவாகி வருவதாகக் கருதப்படுகிறது.

நிதிஷ்குமார்

நிஷாந்த் குமார் தவிர, கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த மேலும் சில புதிய முகங்களுக்கும் இந்த அமைச்சரவை விரிவாக்கத்தில் வாய்ப்பு வழங்கப்பட உள்ளது. குறிப்பாக, இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு அதிக பிரதிநிதித்துவம் அளிக்க நிதிஷ்குமார் பரிந்துரைத்துள்ளதாகத் தெரிகிறது.