அணைக்கட்டில் கோர படகு விபத்து... சுற்றுலாப் பயணிகளின் கடைசி நிமிடம்... அதிர்ச்சி வீடியோ!
மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூர் அருகே உள்ள பார்கி அணையில் சுற்றுலா சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 9 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து நடப்பதற்குச் சில நிமிடங்களுக்கு முன்பு படகில் இருந்த சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியாகப் பயணிக்கும் வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகிப் பார்ப்போரை நிலைகுலையச் செய்துள்ளன. இந்த வீடியோவில் பயணிகள் எவ்வித பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி ஆபத்தான முறையில் பயணிப்பது வெட்டவெளிச்சமாகியுள்ளது.
🚨 Jabalpur Boat Tragedy
— Public News X (@PublicNewsX) May 1, 2026
VIDEO SHOWS No life jackets given until it started sinking.
Crew ignored warnings to turn back amid strong winds.
Safety lapses highlight risks of water activities in India. Probe underway.#MPTourism #BargiDam #Cruise https://t.co/KYLKVhEqBG pic.twitter.com/R2lzzLX8zF
வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையையும் மீறி, பலத்த காற்று வீசிய போதும் சுற்றுலாத் துறைக்குச் சொந்தமான அந்தப் படகு இயக்கப்பட்டதே இந்தத் துயரத்திற்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. விபத்துக்குள்ளான படகில் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை விட அதிகமான பயணிகள் ஏற்றப்பட்டதும், பயணிகளுக்கு ஆரம்பத்திலேயே உயிர் காக்கும் கவச உடைகள் வழங்கப்படாததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. படகு நீரில் மூழ்கத் தொடங்கிய பிறகே ஊழியர்கள் கவச உடைகளைத் தேடியது நிர்வாகத்தின் உச்சக்கட்ட அலட்சியத்தைக் காட்டுகிறது.
இந்தக் கோர விபத்தில் பலியானோரின் குடும்பங்களுக்குத் தலா 2 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும் இழப்பீடு அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் உத்தரப் பிரதேசத்தில் நிகழ்ந்த இதே போன்ற படகு விபத்தில் 15 பேர் பலியான நிலையில், மீண்டும் ஒருமுறை இதுபோன்ற சம்பவம் நிகழ்ந்திருப்பது சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்புக் குறித்த பெரும் கேள்வியை எழுப்பியுள்ளது. இனியாவது அரசு விழித்துக்கொண்டு நீர்நிலைச் சுற்றுலாக்களில் கடுமையான பாதுகாப்புக் கட்டுப்பாடுகளை அமல்படுத்த வேண்டும் எனப் பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
