உடல் உறுப்புகள் தானம் செய்தவருக்கு அரசு மரியாதை.. விபத்தில் மூளைச்சாவடைந்ததால் உறவினர்கள் முடிவு..!!
அந்தியூர் அருகே விபத்தில் மூளை சாவு அடைந்த வாலிபரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டதால் அரசு மரியாதையுடன் உடல் தகனம்.....
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்துள்ள மூலியனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மாதேஷ் (வயது 31) இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளது.கட்டிட தொழிலாளியான மாதேஷ் கடந்த 29-ஆம் தேதி வாகன விபத்து ஏற்பட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மூளை சாவு அடைந்தார்.
பின்னர் விபத்தில் மூளை சாவு அடைந்த மாதேஷின் உடல் உறுப்புகளை தானம் அளிப்பதாக பெற்றோர்கள் மற்றும் மனைவி தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து மாதேஷின் உடல் முளியனூர் கிராமத்தில் இன்று அடக்கம் செய்யப்பட்டது. அவரது உடலுக்கு வருவாய் கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பின்னர் மாதேஷின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர். இதனையடுத்து குடும்பத்தினரும் உறவினர்களும் கதறி அழுத சம்பவம் நெஞ்சம் நெகிழ செய்தது.