#BREAKING: இயக்குநர் பாரதிராஜா காலமானார்.. தமிழகமே அதிர்ச்சி!

 
பாரதிராஜா பாரதிராஜா

”என் இனிய தமிழ் மக்களே...” என்கிற பாசத்திற்குரிய பாரதிராஜாவின் குரல் அரை நூற்றாண்டு காலங்களாக தமிழ் சினிமா ரசிகர்களின் இதயத்தை வருடிக் கொடுத்த நிலையில், மீளா தூக்கத்திற்கு சென்றுள்ளது. தமிழ் சினிமாவை ஸ்டுடியோக்களுக்குள் இருந்து கிராமத்து மண் வாசனைக்குக் கூட்டிச் சென்ற 'இயக்குநர் இமயம்' பாரதிராஜா (84) இன்று அதிகாலை காலமானார். அவரது மறைவுச் செய்தி கேட்டு ஒட்டுமொத்த திரையுலகினரும், உலகெங்கும் உள்ள தமிழ் சினிமா ரசிகர்களும் அதிர்ச்சியிலும் பெருஞ்சோகத்திலும் ஆழ்ந்துள்ளனர்.

கடந்த சில காலமாகவே வயது முதிர்வு மற்றும் அத்தியாவசிய உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு வந்த இயக்குநர் பாரதிராஜா, அதற்காகத் தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், இன்று அதிகாலை சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் வைத்துச் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த வேளையில், சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது. தமிழ் சினிமாவின் போக்கையே மாற்றி எழுதிய ஒரு சகாப்தம் இன்றுடன் நிறைவடைந்துள்ளது.

பாரதிராஜா

தன்னுடைய தனித்துவமான முத்திரையால் தமிழ் திரையுலகை உலகத் தரத்திற்கு உயர்த்தியவர் பாரதிராஜா. திரையரங்குகளில் அதுவரை இருந்த நாடகபாணிச் சினிமாவை உடைத்து, '16 வயதினிலே' திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் புதிய புரட்சியை ஏற்படுத்தினார். அதனைத் தொடர்ந்து சிகப்பு ரோஜாக்கள், அலைகள் ஓய்வதில்லை, மண் வாசனை, வேதம் புதிது, முதல் மரியாதை, பசும்பொன், கருத்தம்மா, பொம்மலாட்டம் மற்றும் கிழக்குச் சீமையிலே உள்ளிட்ட எண்ணற்ற காவியங்களைத் தந்து தமிழ் சினிமாவின் 'இயக்குநர் இமயமாக' அசைக்க முடியாத சிம்மாசனத்தில் அமர்ந்தார்.

அவரது மறைவுச் செய்தி வெளியானதைத் தொடர்ந்து, திரையுலகைச் சேர்ந்த முன்னணி நடிகர்கள், இயக்குநர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்திற்கு விரைந்து வண்ணம் உள்ளனர்.

மதிவதனி பாரதிராஜா

இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் மறைவுக்கு திரையுலகினர், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர். அன்னாரது இறுதிச்சடங்கு குறித்த விபரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.