இந்தியாவில் சிஏஏ சட்டம் அமலாவது கவலையளிக்கிறது... நிலைமையை கண்காணித்து வருவதாக அமெரிக்கா தகவல்!
இந்தியாவில் சிஏஏ சட்டம் அமலுக்கு வந்துள்ளது கவலையளிப்பதாகவும், நிலைமைகளை உன்னிப்பாக கண்காணித்து வருவதாகவும் அமெரிக்கா தகவல் தெரிவித்துள்ளது.
கடந்த 2014 டிசம்பர் 31ம் தேதிக்கு முன்னர் பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தானில் இருந்து வந்த முஸ்லிம் அல்லாத மத சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்கும் சிஏஏ சட்டத்தை கடந்த 11ம் தேதி மத்திய அரசு அமலுக்கு கொண்டு வந்தது.
சிஏஏ சட்டம் அமல்படுத்தப்பட்டதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மேலும் அசாம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இதனை கண்டித்து போராட்டங்களும் நடந்து வருகின்றன.
#WATCH | On CAA implementation, US State Department Spokesperson Matthew Miller says, "We are concerned about the notification of Citizenship (Amendment) Act. We are closely monitoring
— ANI (@ANI) March 15, 2024
how this Act will be implemented. Respect for religious freedom and equal treatment under the… pic.twitter.com/55Xhog4Itp
இந்நிலையில், சிசிஏ சட்டம் இந்திய முஸ்லிம்களின் குடியுரிமையை பாதிக்காது. எனவே இதுகுறித்து அவர்கள் கவலைப்படத் தேவையில்லை. இந்து சகோதரர்கள் போலவே முஸ்லிம்களும் சம உரிமைகளைப் பெறும் சமூகத்தில் இச்சட்டம் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாது என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. இச்சூழலில் இந்தியாவில் சிஏஏ சட்டம் அமலுக்கு வந்துள்ளது கவலையளிப்பதாகவும், அங்குள்ள நிலைமைகளை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அந்நாட்டின் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மத்தேயு மில்லர் நேற்று செய்தியாளர்களிடம் கூறுகையில், "மார்ச் 11 குடியுரிமை (திருத்த) சட்ட அறிவிப்பு குறித்து நாங்கள் கவலைப்படுகிறோம். இந்தச் சட்டம் எவ்வாறு செயல்படுத்தப்படும் என்பதை நாங்கள் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம். மத சுதந்திரத்துக்கு மதிப்பளிப்பதும், அனைத்து சமூகங்களும் சட்டத்தின் கீழ் சமமாக நடத்தப்படுவதும் அடிப்படை ஜனநாயகக் கொள்கைகளாகும்." என்றார்.
இதேபோல், சிஏஏ சட்டம் அமல்படுத்தப்பட்டதற்கு பாகிஸ்தானும் தனது ஆட்சேபணையை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்நாட்டின் வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் மும்தாஜ் ஜஹ்ரா பலூச் கூறுகையில், “இந்த சட்டம் இயற்கையாகவே பாரபட்சமானது. இது மக்களின் நம்பிக்கையின் அடிப்படையில் வேறுபடுகிறது" என்றார்.