அமலுக்கு வந்தது... செயற்கைப் பன்னீருக்கு ஓராண்டு தடை - உணவுப் பாதுகாப்புத் துறை நடவடிக்கை!
உடல்நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் 'அனலாக் பன்னீர்' எனப்படும் செயற்கைப் பன்னீரின் உற்பத்தி மற்றும் விற்பனைக்கு மகாராஷ்டிர அரசு ஓராண்டு காலத்திற்குத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
பாலுக்குப் பதிலாகத் தாவர எண்ணெய் மற்றும் பல்வேறு ரசாயனங்களை ஒன்றிணைத்து இந்தச் செயற்கைப் பன்னீர் தயாரிக்கப்பட்டு வந்துள்ளது. அம்மாநில உணவுப் பாதுகாப்புத் துறை நடத்திய தீவிர மாதிரிச் சோதனைகளில், பயன்பாட்டிலிருந்த 35 சதவீதத்திற்கும் அதிகமான பன்னீர் மாதிரிகள் தரம் குறைந்தவை மற்றும் போலியானவை என்பது கண்டறியப்பட்டுள்ளது.

உணவகங்கள் மற்றும் சுபநிகழ்ச்சிகளுக்கான கேடரிங் அமைப்புகள் பலவற்றில், வாடிக்கையாளர்களுக்குத் தெரியாமல் உண்மையான பன்னீருக்குப் பதிலாக இந்தச் செயற்கைப் பன்னீரைப் பயன்படுத்தி வந்தது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து பொதுமக்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் பொருட்டு, செயற்கைப் பன்னீர் உற்பத்தி, சேமிப்பு மற்றும் விற்பனைக்கு உடனடியாக அமலுக்கு வரும் வகையில் ஓராண்டுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
