பெண்கள் கழிவறையில் கேமரா... அரசு மருத்துவமனையில் டாக்டர் வெறித்தனம்!
பொள்ளாச்சியில் அரசு மருத்துவமனை பெண்கள் கழிவறையில் ‘பேனா கேமரா’ வைத்த பயிற்சி மருத்துவர் கைது செய்யப்பட்டுள்ளது நோயாளிகளிடையேயும், பொதுமக்களிடையேயும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தாலுகா கீழ்குப்பம் அருகே உள்ள பனமரத்துப்பட்டியை சேர்ந்தவர் வெங்கடேசன்(33). மருத்துவரான இவர் தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் கோவையில் வசித்து வருகிறார்.
கோவை அரசு மருத்துவமனையில் பணிபுரிந்து வந்த அவர், பட்ட மேற்படிப்பு பயிற்சிக்காக கடந்த மாதம் 16-ந்தேதி பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு வந்தார். இந்நிலையில் வெங்கடேசன் கடந்த சில நாட்களுக்கு முன்பு பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் உள்ள பெண்கள் கழிவறையில் ரகசியமாக பேனா கேமராவை பொருத்தியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று முன்தினம் பயிற்சி நர்சிங் மாணவிகள் அந்த கழிவறைக்கு சென்றுள்ளனர். அப்போது கழிவறையை சுத்தம் செய்யக்கூடிய பிரஷில் ரப்பர் பேண்ட் சுற்றப்பட்ட நிலையில் பேனா வடிவில் கேமரா இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
உடனே அந்த கேமராவை எடுத்துக்கொண்டு மாணவிகள் வெளியே வந்தனர். அப்போது அங்கு நின்றிருந்த வெங்கடேசனிடம், கழிவறையில் ரகசிய கேமரா வைக்கப்பட்டு இருந்ததாக காண்பித்தனர். அவரும் அந்த கேமராவை வாங்கிக்கொண்டு, இதுகுறித்து விசாரிப்பதாக கூறி மாணவிகளை அனுப்பி வைத்தார். ஆனாலும் மாணவிகள், மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் ராஜாவிடம் புகார் தெரிவித்தனர்.
பின்னர் மருத்துவமனையில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகள் ஆய்வு செய்யப்பட்டது. அதில் டாக்டர் வெங்கடேசன் அந்த கழிப்பறைக்கு சென்று வருவது போன்ற காட்சிகள் பதிவாகி இருந்தன. இதையடுத்து அவரை அழைத்து விசாரித்த போது, ரகசிய கேமராவை வைத்ததை ஒப்புக்கொண்டார். இதுகுறித்து பொள்ளாச்சி நகர கிழக்கு போலீஸ் நிலையத்தில் மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் ராஜா புகார் அளித்தார்.

இதைத்தொடர்ந்து கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் உத்தரவின்பேரில் போலீசார் டாக்டர் வெங்கடேசனை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் ஆன்லைன் மூலம் ரகசிய கேமராவை வாங்கி அதை பெண்கள் கழிவறையில் வைத்ததும், கேமராவில் பதிவான காட்சிகளை செல்போன் மூலம் பார்த்து ரசித்ததும் தெரியவந்தது. வெங்கடேசனிடம் இருந்து செல்போன், மெமரி கார்டு ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவற்றை ஆய்விற்கு அனுப்பி வைத்தனர்.
டாக்டர் வெங்கடேசனை தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல், பெண்களை தவறாக சித்தரித்தல் ஆகிய 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து போலீசார் கைது செய்தனர். மேலும் அவரை பொள்ளாச்சி கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். நீதிபதி அவரை வருகிற 13-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து அவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த சம்பவம் பொள்ளாச்சி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!
