யாருமே பேசல... கனடாவில் 5 ஆண்டுகள் படித்துவிட்டுத் தாயகம் திரும்பிய மாணவன் குமுறல்... வைரல் பதிவு!

 
canada

இந்தியாவைச் சேர்ந்த 26 வயது மாணவர் ஒருவர், கனடாவில் தங்கி சுமார் 5 ஆண்டுகள் வரை உயர்கல்வி பயின்று வந்துள்ளார். அங்கு நிரந்தரக் குடியுரிமை (PR) பெற முடியாத சூழ்நிலை ஏற்பட்டதால், அவர் தற்பொழுது தனது சொந்த நாடான இந்தியாவுக்குத் திரும்ப வேண்டிய கட்டாயம் நேர்ந்துள்ளது. வெளிநாட்டில் இருந்த சமயத்தில் தங்களின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களை மிகவும் மிஸ் செய்ததாகக் குறிப்பிட்ட அந்த மாணவர், இந்தியா திரும்பிய பிறகு அவர்கள் காட்டும் மாறுபட்ட நடத்தை தனக்கு மிகுந்த மனவேதனையை அளிப்பதாகச் சமூக வலைதளத்தில் உருக்கமாகப் பகிர்ந்துள்ளார்.

அவர் பதிவிட்டுள்ள அந்தப் புகாரில், தான் கனடாவில் இருந்தபோது கல்விக்கடன் பெற்றுப் படித்துக்கொண்டே, தங்களின் குடும்பச் செலவுகள் மற்றும் மாதத்தவணைகளுக்காக (EMI) ஒவ்வொரு மாதமும் தவறாமல் வீட்டிற்குப் பணம் அனுப்பி வந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். ஆனால் தற்பொழுது வேலை இல்லாத காரணத்தால் தன்னிடம் யாரும் அன்பாகப் பேசுவதில்லை என்றும், உழைப்பு போதவில்லை எனக் குடும்பத்தினரே குற்றம் சாட்டுவதாகவும் வருத்தப்பட்டுள்ளார். மேலும் 26 வயதாகிவிட்டதால் எங்குச் சென்றாலும் எப்போது திருமணம் என்ற ஒரே கேள்வியைக் கேட்டுத் தன்னைத் தனிப்பட்ட முறையில் தொந்தரவு செய்வதாக அவர் குமுறியுள்ளார்.

ஒரு மனிதனின் மதிப்பு அவன் வாழும் இடம் மற்றும் அவன் சம்பாதிக்கும் பணத்தை வைத்தே இங்குத் தீர்மானிக்கப்படுகிறது என்ற கசப்பான உண்மையை இந்தச் சம்பவம் உணர்த்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த உருக்கமான ரெடிட் (Reddit) பதிவு தற்பொழுது சமூக வலைதளங்களில் மிக வேகமாகப் பரவி நெட்டிசன்கள் மத்தியில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இதைப் பார்த்த பலரும் அந்த இளைஞருக்கு ஆறுதல் கூறி வருவதோடு, மற்றவர்களின் பேச்சைக் கண்டு சோர்ந்து போகாமல் தங்களின் எதிர்காலப் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துமாறு பல்வேறு ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர்.