கல்வி உதவித்தொகையில் ரூ.11 கோடி மோசடி - அரசு அதிகாரிகள் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு!

 
மாற்றுத்திறனாளிகள் மாற்றுத்திறனாளிகள்

தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகையில் ரூ.11 கோடி மோசடி செய்ததாக, அடையாளம் தெரியாத அரசு அதிகாரிகள் மீது சி.பி.ஐ. வழக்குப் பதிவு செய்துள்ளது.

மத்திய அரசு மாணவர்களுக்கு வழங்கி வந்த 6 வெவ்வேறு கல்வி உதவித்தொகை திட்டங்களை ஒருங்கிணைத்து, கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் ஒரே திட்டமாகச் செயல்படுத்தி வருகிறது. இதில் 10-ஆம் வகுப்புக்குப் பிந்தைய 11, 12-ஆம் வகுப்புகள், பட்டயப் படிப்பு மற்றும் சான்றிதழ் படிப்பு பயிலும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை திட்டமும் அடங்கும்.

மாற்றுத்திறனாளிகள்

இந்நிலையில், மத்திய சமூக நீதி அமைச்சகம் மேற்கொண்ட கள ஆய்வில் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகின. டெல்லி, உத்தரப்பிரதேசம், தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் காஷ்மீர் ஆகிய 5 மாநிலங்களில் உள்ள 28 கல்வி நிறுவனங்களில், 926 மாற்றுத்திறனாளி மாணவர்கள் பயின்றதாகக் கணக்குக் காட்டி, சுமார் ரூ.11 கோடியே 40 லட்சம் கையாடல் செய்யப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.

இது குறித்த விசாரணையில், இந்த உதவித்தொகையைப் பெற்றதாகக் கூறப்பட்ட கல்வி நிறுவனங்கள் பல, உண்மையில் நடைமுறையில் இல்லாத 'போலி நிறுவனங்கள்' என்பது தெரியவந்தது. மேலும், சில மூடப்பட்ட கல்வி நிறுவனங்களின் பெயரிலும், அங்கு பயிலாத மாணவர்களின் பெயரிலும் போலி கணக்குகள் தொடங்கிப் பணம் கையாடல் செய்யப்பட்டுள்ளது. சில இடங்களில் செயல்படும் கல்வி நிறுவனங்களுக்குத் தெரியாமலேயே அவற்றின் பெயரில் நிதியை வரவு வைத்து மோசடி செய்துள்ளனர்.

சி.பி.ஐ. இயக்குனராக சுபோத் குமார் ஜெய்ஸ்வால் நியமனம்

இது தொடர்பாக மத்திய சமூக நீதி அமைச்சகச் செயலாளர் அளித்த புகாரின் பேரில், சி.பி.ஐ. அதிகாரிகள் முதற்கட்ட விசாரணையைத் தொடங்கினர். இந்த முறைகேட்டில் அரசு அதிகாரிகளுக்கும் தொடர்பு இருப்பது உறுதியானதைத் தொடர்ந்து, 5 மாநிலங்களைச் சேர்ந்த பெயர் குறிப்பிடப்படாத அரசு அதிகாரிகள் மற்றும் மாவட்ட அளவிலான தொடர்பு அதிகாரிகள் மீது சி.பி.ஐ. வழக்குப் பதிவு செய்துள்ளது. இந்த மிகப்பெரிய நிதி மோசடியில் தொடர்புடைய நபர்களைக் கண்டறியச் சம்பந்தப்பட்ட மாநிலங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.