தேர்தல் விளம்பரங்களுக்கு ‘செக்’... தேர்தல் அலுவலர் எச்சரிக்கை!

 
தேர்தல் தேர்தல்

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், கடைசி நேரத்தில் வாக்காளர்களைக் கவரும் வகையில் நாளிதழ்கள் மற்றும் ஊடகங்களில் வெளியாகும் விளம்பரங்களைக் கண்காணிக்க இந்தியத் தேர்தல் ஆணையம் புதிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள் அல்லது தனிநபர்கள் தேர்தல் தொடர்பான விளம்பரங்களை வெளியிடுவதற்கு முன்பாக, "ஊடகச் சான்றளிப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவிடம்" உரிய அனுமதி பெற வேண்டும்.

அர்ச்சனா

வாக்குப்பதிவு நாளான 23.04.2026 மற்றும் அதற்கு முந்தைய நாளான 22.04.2026 ஆகிய இரண்டு நாட்களில் நாளிதழ்களில் வெளியாகும் அனைத்து விளம்பரங்களுக்கும் இந்த அனுமதி கட்டாயம். விளம்பரம் வெளியாவதற்கு 48 மணி நேரத்திற்கு முன்பாகவே MCMC குழுவிடம் விண்ணப்பித்துச் சான்றிதழ் பெற வேண்டும்.

கடந்த காலத் தேர்தல்களில், வாக்குப்பதிவுக்கு முந்தைய நாள் எதிர்க்கட்சிகள் மீது ஆதாரமற்ற புகார்களை விளம்பரமாக வெளியிட்டு, அதற்குப் பதிலளிக்க அவகாசம் இல்லாத நிலையை உருவாக்குவதை சில கட்சிகள் வழக்கமாகக் கொண்டிருந்தன. இத்தகைய "திடீர் தாக்குதல்" விளம்பரங்களைத் தடுத்து, நேர்மையான தேர்தலை உறுதி செய்யவே இந்த நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது.

தேர்தல் வேட்புமனு தாக்கல்

மாவட்ட அளவிலான MCMC குழுவிடம் (மாவட்ட ஆட்சியர் அலுவலகம்) விண்ணப்பிக்க வேண்டும். மாநில அளவிலான MCMC குழுவிடம் (தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலகம்) விண்ணப்பிக்க வேண்டும்.

நாளிதழ்கள் மட்டுமன்றி, முகநூல், எக்ஸ், வாட்ஸ்அப் மற்றும் யூடியூப் போன்ற சமூக வலைதளங்களில் வெளியாகும் விளம்பரங்களுக்கும், மின்-தாள்களுக்கும் முன்கூட்டியே அனுமதி பெறுவது அவசியம் எனத் தேர்தல் அலுவலர் எச்சரித்துள்ளார். தடையை மீறி விளம்பரம் வெளியிடும் ஊடகங்கள் மற்றும் வேட்பாளர்கள் மீது தேர்தல் விதிமீறல் சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.