சென்னையில் ஏசி வசதியுடன் கூடிய 11 நவீன பேருந்து நிறுத்தங்கள் !
சென்னையில் பேருந்துக்காகக் காத்திருக்கும் பயணிகளின் வசதிகளை மேம்படுத்தும் நோக்கில், பெருநிறுவனங்களின் சமூகப் பங்களிப்பு நிதியைக் கொண்டு முதல்கட்டமாக 11 இடங்களில் அனைத்து வசதிகளுடன் கூடிய குளிரூட்டப்பட்ட பேருந்து நிறுத்தங்கள் அமைக்கப்பட உள்ளன. இதற்கான அதிகாரப்பூர்வ புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் சென்னை மாநகராட்சி ஆணையர் சமீரன் மற்றும் சென்னை பெருநகர காவல் ஆணையர் அமல்ராஜ் ஆகியோர் முன்னிலையில் பங்களிப்பு நிறுவனங்களுடன் நேற்று ரிப்பன் கட்டிட அலுவலகக் கூட்டரங்கில் மேற்கொள்ளப்பட்டன.

இந்த புதிய பேருந்து நிறுத்தங்களில் பயணிகள் வெயில் மற்றும் மழையிலிருந்து பாதுகாப்பாகக் காத்திருக்க குளிரூட்டப்பட்ட காத்திருப்பு அறை, மின்விளக்குகள், வெயில் தாங்கும் கூரை மற்றும் பாதுகாப்பான கண்ணாடி போன்ற வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன. மேலும் பயணிகளின் பாதுகாப்புக்காகக் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படுவதோடு, பேருந்து வழித்தடங்கள் குறித்த தகவல்கள் மற்றும் வைபை வசதி ஆகியவையும் வழங்கப்படவுள்ளன. மாற்றுத்திறனாளிகள் எளிதில் பயன்படுத்தும் வகையில் சாய்வுதளப் பாதையும், மின்சார வாகனங்களைச் சார்ஜ் செய்யும் வசதியும் இந்த நவீன பேருந்து நிறுத்தங்களில் இடம்பெற உள்ளது.

டி.எம்.எஸ். அண்ணாசாலை, மயிலாப்பூர் பேருந்து நிறுத்தம், வடபழனி ஜவஹர்லால் நேரு சாலை, வேளச்சேரி விஜயநகர் பேருந்து முனையம், வடபழனியில் மற்றொரு பேருந்து நிறுத்தம், கிண்டி சின்னமலை, ஆற்காடு சாலையில் உள்ள ஆவிச்சி பள்ளி, ஆலந்தூர் மெட்ரோ, எழும்பூர் வடக்கு மற்றும் எழும்பூர் தெற்கு ஆகிய 11 இடங்களில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. தேவைப்படும் பட்சத்தில் இந்த நவீன பேருந்து நிறுத்தங்கள் மேலும் பல பகுதிகளுக்கும் தொடர்ந்து விரிவுபடுத்தப்படும் என மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
