முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் நயினார் நாகேந்திரனுக்கு வாழ்த்து.!

5 நாட்கள் விடுமுறைக்கு பிறகு இன்று மீண்டும் தமிழக சட்டப்பேரவை கூடியது. இன்றைய சட்டப்பேரவை நிகழ்வில் மாநில சுய ஆட்சி குறித்த முக்கிய தீர்மானத்தை முதல்வர் ஸ்டாலின் தாக்கல் செய்து இது குறித்து சில விஷயங்களை பற்றி பேசியுள்ளார். குறிப்பாக தமிழ்நாடு பாஜகவின் மாநிலத் தலைவராக பொறுப்பேற்றுள்ள நயினார் நாகேந்திரனுக்கு முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் வாழ்த்து தெரிவித்துள்ளார் . இச்சம்பவம் அரசியல் வட்டாரங்களில் கவனம் ஈர்த்துள்ளது.
சட்டப்பேரவையில் மாநில உரிமைகளை மத்திய அரசு பறிப்பதாக முதல்வர் ஸ்டாலின் குற்றம்சாட்டி உரையாற்றினார். அதே சமயம், பாஜக மாநிலத் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டதற்காக பேரவையிலேயே நயினார் நாகேந்திரனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். பதிலுக்கு நயினார் நாகேந்திரனும் நன்றிகளை கூறினார்.
தமிழ்நாட்டில் திமுகவும் பாஜகவும் அரசியல் ரீதியாக எதிரெதிர் துருவங்களில் இருக்கின்றன. திமுக, மாநில உரிமைகள், சமூக நீதி, மற்றும் மதச்சார்பின்மை இவைகளை வலியுறுத்தும் கட்சியாக உள்ளது. அதேவேளையில் பாஜக தேசியவாதம் மற்றும் இந்துத்துவக் கொள்கைகளை முன்னிறுத்துகிறது. இதனால், சட்டப்பேரவையில் ஸ்டாலினின் வாழ்த்து தெரிவித்தது அரசியல் மாறுபாடுகளுக்கு மத்தியில் ஒரு மரியாதை நிமித்தமான தருணத்தை பிரதிபலிப்பதாக அரசியல் ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.