ஓடும் ரயிலில் ஏற முயன்ற இளம் தாய் பலி; செய்வதறியாது கதறி அழுத பச்சிளம் குழந்தைகள்... கண்ணீர் வீடியோ!
ஜார்கண்ட் மாநிலம் கோடெர்மா ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் ஏற முயன்ற 24 வயது இளம் தாய், நிலைதடுமாறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ரயிலில் ஏற முயன்றபோது கால் வழுக்கி விழுந்ததில் அவருக்குக் கடுமையான காயம் ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து காப்பாற்ற முயன்றபோதிலும், அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். ஒரு சில வினாடிகளில் நடந்த இந்த விபத்து அந்தப் பகுதியில் இருந்த பயணிகளைப் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
🚨Heartbreaking Tragedy at Koderma Station: Negligence and Haste Claim a Mother's Life, Leaving Two Infants Orphaned.
— Ramesh Tiwari (@rameshofficial0) April 25, 2026
Incident: A 24 year old mother lost her life due to the dangerous attempt to catch a train, further exposing the stark lack of safety vigilance at our railway… pic.twitter.com/Z2Qbz1OZcA
இந்தத் துயரச் சம்பவத்தை விடவும், அந்தப் பெண்ணின் இரண்டு பச்சிளம் குழந்தைகள் நடைமேடையில் தாயைத் தேடி அழுதுகொண்டிருந்த காட்சி அங்கிருந்தவர்களின் நெஞ்சைப் பிழிவதாக இருந்தது. தங்களுக்கு என்ன நேர்ந்தது என்றே தெரியாத அந்தப் பிஞ்சுகள், நடைமேடையில் தனியாகத் தவித்ததைக் கண்டு சக பயணிகள் ஓடி வந்து அவர்களை அரவணைத்தனர். பின்னர் அந்த இரண்டு குழந்தைகளும் ரயில்வே அதிகாரிகளிடம் பாதுகாப்பாக ஒப்படைக்கப்பட்டனர். தாயை இழந்த அந்தக் குழந்தைகளின் எதிர்காலம் குறித்துப் பலரும் கவலை தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து ரயில் நிலையங்களில் நிலவும் பாதுகாப்பு குறைபாடுகள் குறித்த கேள்விகளை மீண்டும் எழுப்பியுள்ளது. அவசர காலங்களில் அல்லது கூட்டம் அதிகமாக இருக்கும் நேரங்களில் பயணிகள் ஓடும் ரயிலில் ஏறுவதைத் தவிர்க்க வேண்டும் என்று ரயில்வே துறை தொடர்ந்து எச்சரித்து வருகிறது. இருப்பினும், இதுபோன்ற உயிரிழப்புகளைத் தடுக்க ரயில்வே பாதுகாப்புப் படை (RPF) மற்றும் நிலைய ஊழியர்கள் கண்காணிப்பை மேலும் தீவிரப்படுத்த வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஒரு சிறு கவனக்குறைவு ஒரு குடும்பத்தையே சிதைத்துவிடும் என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு கசப்பான பாடமாக அமைந்துள்ளது.
