பேத்தியை 15 ஆண்டுகள் வளர்த்ததற்காக ரூ.45 லட்சம் இழப்பீடு கோரி சொந்த மகன் மீது தாய் வழக்கு !
சீனாவில் தாய் ஒருவர் தனது சொந்த மகன் மீது நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு ஒன்று உலக அளவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. 15 ஆண்டுகளாகத் தனது பேத்தியை வளர்த்துப் பராமரித்தற்காக மகனிடம் ரூ.45 லட்சம் இழப்பீடு கேட்டு அவர் வழக்கு தொடுத்துள்ளார்.
சீனாவின் கிழக்குப் பகுதியில் வசித்து வரும் 60 வயது மதிக்கத்தக்க 'சு' (Xu) என்ற பெண்மணியின் மகன் லியாங் (Liang). கடந்த 2014ஆம் ஆண்டு லியாங் தனது மனைவியை விவாகரத்து செய்து பிரிந்துவிட்டார். அதனைத் தொடர்ந்து, தனது நான்கு வயது மகளைப் பராமரிக்கும் முழுப் பொறுப்பையும் தனது தாயான 'சு'விடமே அவர் ஒப்படைத்துள்ளார்.
கடந்த 15 ஆண்டுகளாகத் தனது சொந்தச் செலவிலேயே பேத்தியின் அன்றாடச் செலவுகள், கல்வி மற்றும் மருத்துவச் செலவுகள் என அனைத்தையும் கவனித்து வந்துள்ளார் பாட்டி 'சு'. இதற்கிடையே லியாங் இரண்டாவது திருமணம் செய்துகொண்டு, தனது புதிய மனைதியுடன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். ஆனால், தனது மகளை மட்டும் தாயிடமே விட்டுவிட்டுச் சென்றுவிட்டதாகக் கூறப்படுகின்றது.
தற்போது முதுமை மற்றும் கடுமையான பொருளாதார நெருக்கடியைச் சந்தித்து வருவதாகத் தெரிவித்துள்ள தாய் 'சு', மகனுக்குக் குடும்பப் பொறுப்பு கொஞ்சமும் இல்லை என்றும், ஒரு தந்தையாக தனது கடமையைச் செய்யத் தவறிவிட்டார் என்றும் குற்றம்சாட்டியுள்ளார். இனிமேலும் தன் சொந்தச் செலவில் பேத்தியைப் பராமரிக்க முடியாது எனக் கூறி, கடந்த 15 ஆண்டுகளாகச் செலவழித்த தொகையாக 3,60,000 யுவான் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.45 லட்சம்) இழப்பீட்டைத் தன் மகன் வழங்க வேண்டும் என்று கோரி ஷாங்காய் நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

