கல்லூரி மாணவிக்கு நேர்ந்த கொடூரம்; கஞ்சா கும்பலின் வெறிச்செயல் - “முதலமைச்சர் மௌனம் காப்பது ஏன்?” - எடப்பாடி கேள்வி!

 
எடப்பாடி எடப்பாடி

 திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே கல்லூரி மாணவி ஒருவரைச் சில இளைஞர்கள் பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு குறித்த அச்சத்தை அதிகரித்துள்ளது. இந்தச் சம்பவத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.

ஸ்டாலின் எடப்பாடி

மீஞ்சூர் அருகே கல்லூரி மாணவி ஒருவரை வழிமறித்த இளைஞர்கள் கும்பல், அவரைத் தனி இடத்திற்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. குற்றம் சாட்டப்பட்ட இளைஞர்கள் அந்தச் சமயத்தில் கஞ்சா போதையில் இருந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் தாராளமாகக் கிடைக்கும் போதைப்பொருட்களே இத்தகைய குற்றங்களுக்குக் காரணமாக அமைகின்றன எனப் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். பாதிக்கப்பட்ட மாணவியின் புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்துள்ள மீஞ்சூர் போலீசார், தலைமறைவாக உள்ள இளைஞர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

இந்தக் கொடூரச் சம்பவம் குறித்துத் தனது எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ள எடப்பாடி பழனிசாமி, "விடியா திமுக ஆட்சியில் பெண்களின் பாதுகாப்பு என்பது எட்டாக்கனியாகிவிட்டது. திருவள்ளூரில் கல்லூரி மாணவிக்கு நேர்ந்த இந்தக் கொடுமை தமிழகத்தையே தலைகுனிய வைத்துள்ளது. கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தத் தவறியதே இத்தகைய சீரழிவுகளுக்குக் காரணம். இந்தக் கொடூரக் குற்றத்தில் ஈடுபட்டவர்களை உடனடியாகக் கைது செய்து மிகக் கடுமையான தண்டனை வழங்க வேண்டும். தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்து வரும் நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் எதற்கெடுத்தாலும் மௌனம் காப்பது ஏன்?" எனத் தெரிவித்துள்ளார்.

எடப்பாடி

தமிழக சட்டமன்றத் தேர்தல் பரப்புரைகளில் பெண்களின் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு ஆகியவை முக்கிய விவாதப் பொருளாக மாறியுள்ளன. ஏற்கனவே இதே போன்ற சம்பவங்கள் ஆங்காங்கே நிகழ்ந்து வரும் நிலையில், அதிமுக மற்றும் இதர எதிர்க்கட்சிகள் இதனை முன்வைத்து அரசைத் தீவிரமாக விமர்சித்து வருகின்றன.