அரசு வேலை மோசடிப் புகார்.. முன்னாள் அமைச்சர் சிவசங்கர் நேரில் ஆஜர்!

 
''வீட்டு மின் இணைப்புகளுக்கு கட்டண உயர்வு இல்லை'' - மின்துறை அமைச்சர் சிவசங்கர் தகவல்!

அரசுப் போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி லட்சக்கணக்கில் பண மோசடி செய்ததாக எழுந்துள்ள புகாரில், திமுக முன்னாள் அமைச்சர் சிவசங்கர் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் முன்னிலையில் இன்று நேரில் ஆஜராகியுள்ளார்.

கடந்த சில காலத்திற்கு முன்பு போக்குவரத்துத் துறையில் பல்வேறு பணியிடங்களை நிரப்புவதாகக் கூறி, பலரிடம் தலா லட்சக்கணக்கில் பணம் வசூலிக்கப்பட்டதாகப் புகார்கள் எழுந்தன. போக்குவரத்துத் துறையில் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி சுமார் ரூ.25 லட்சம் வரை மோசடி செய்யப்பட்டுள்ளதாகச் சென்னை மத்திய குற்றப்பிரிவில் பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது.

இந்த மோசடி வழக்கை தீவிரமாக விசாரித்து வந்த மத்திய குற்றப்பிரிவு போலீசார், அதன் தொடர்ச்சியாக முன்னாள் அமைச்சர் சிவசங்கருக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராகக் கோரி அதிகாரப்பூர்வமாகச் சம்மன் அனுப்பியிருந்தனர். இந்த வழக்கில் முன்னாள் அமைச்சருக்கு உள்ள தொடர்பு குறித்துப் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் திருப்பங்கள் ஏற்பட்டுள்ளன.

இவ்வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்டு விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்ட சிவசங்கரின் தனி உதவியாளர் போலீசாரிடம் வாக்குமூலம் ஒன்றை அளித்துள்ளார்.

அந்த வாக்குமூலத்தின் அடிப்படையில், இந்த ரூ.25 லட்சம் வேலை மோசடிப் புகாரில் முன்னாள் அமைச்சர் சிவசங்கருக்கும் நேரடித் தொடர்பு இருப்பதாகப் போலீசார் தயாரித்த முதல் தகவல் அறிக்கையில் திட்டவட்டமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. சம்மனின் அடிப்படையில், சென்னை வேப்பேரியில் உள்ள மாநகரக் காவல் ஆணையர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில், சிவசங்கர் இன்று காலை விசாரணை அதிகாரிகளின் முன்னிலையில் நேரில் ஆஜராகியுள்ளார்.

மோசடிப் பணம் யாரிடமெல்லாம் வாங்கப்பட்டது, இதில் உள்ள பிற இடைத்தரகர்கள் யார் மற்றும் முறைகேடுகள் எவ்வாறு அரங்கேற்றப்பட்டன என்பது குறித்து உயர் போலீஸ் அதிகாரிகள் அவரிடம் தீவிரப் புலனாய்வு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.